கவிதையில்லை - கட்டுரையுமில்லை - இது ஒரு - கவியுரை!!!
எகிறிவிட்ட விலைவாசி,
ஏராமலிருக்கும் சம்பளம்...
நடுநிலை வர்க்கம் ஆகுமோ
குடிசைவாசிகளாய்?
ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தின்
மனதினுள்ளும் ஒளிந்திருக்கும்
சற்றே ரகசியமான
அந்த மில்லியனர் கனவு!
நீ செய்யும் தவறே, நீ மறுக்கும் கொள்கையே
உனக்கான வில்லனாய் மாறிப்போகும்
உண்மை உனக்குத் தெரியுமா
நடுத்தர வர்க்கமே?
திருட்டு டிவிடி தப்பு என்றால்,
அட ஆமாம்ல! என்று ஒப்புதல் அளிக்கிறாய்.
உன் வீட்டில் இருக்கும்
அந்த இரண்டு டிவிடிக்களை என்ன செய்வாய்?
ஊழல் மலிஞ்சிருக்கு என்றும் புலம்பிவிட்டு...
வரிசை மீற, முன்னுரிமை கிடைக்க,
ஐந்து பத்து கொடுத்து, அத்து மீறுகிறாய்!
அது தவறென்று தெரிந்தும் மீறுகிறாய்!
கரெக்டா பேசுறான் பார் என்று,
நீயா நானா பார்த்து குமுறுகிறாய்!
அடுத்த நாள் நீ வழக்கமாய்ச் செய்வது பார்.
புரியும் உனக்கு உண்மையில் நீ யாரென்று!
அதிகமான வேலை; அலைகழிக்கும் கடன்
குடி, மன அழுத்தம், குடும்பத்தில் சண்டை.
முறைப்படுத்தி யோசித்தால், உன் தவறென்ன?
இக்கவியுரையை இன்னொருமுறை படித்துப்பார்!
இன்னும் எறியப்படாமலே இருக்கிறது,
குற்றம் இழைக்காதவரிடமிருந்து
ஏசுநாதர் வேண்டிவிரும்பி எறியச் சொன்ன
அந்த முதல் கல்!