துயரிரவு

கருமை அப்பிய அடர்
கருங்காடாய் விடிகின்றன
நீயில்லா
என் அதிகாலைகள் !

ஆதவ சேவகர்கள்
செங்குழம்பு பிளம்படிக்கும்
கீழை வானச்சிவப்பாகி
செங்காந்தாள் மலராகி
காந்தலோடும் சிவந்தும்
கிடக்கின்றன
என் விழிகள் !

பேர் தெரியாத
ஏதோ ஓர் பறவை
நீ இல்லாதது தெரிந்து
என் கணங்களை
கொத்தி சென்று
திரும்ப வந்து
என் மேல்
ஒரு யுகங்களை
உமிழ்ந்து விட்டுச்செல்கிறது !

நீயின்றி யுகங்கடப்பது
தெரியாது
வெறுமையில் பதிந்து
கிடக்கும்
என் காத்திருப்பின் வேர்கள்
என்னுள் பற்றியெரிகிறது !

இரவெல்லாம் இமை மூடா
உன் வதன நோக்கில்
தூங்கா விளக்காய்
துடிதெரிந்தது அறியாது
சன்னலோர பயணத்தில்
என் காதோர ரோமம் தொட்டு
மென் காற்று கிசு கிசுக்கிறது
இமைகளின் சோர்வு பற்றி !

மரித்துக்கருத்த
பெரும் சர்ப்பமென
நீண்டு நெடிதாகி
வளைந்தும் நெளிந்தும்
கவனிப்பாரற்று கிடக்கிறது
நடு நிசி நெடுஞ்சாலை
உன்னை விட்டு
ஊர முடியாத
என் நினைவுகளை போல !

பெரும் புழுக்கத்துடன்
முள்ளென இதயம் கிழிக்கும்
காற்றற்ற இரவுகளில்
ரோஜாக்களின் இதழ்களில்
வியர்வை முத்துக்கள்
கொட்டிக்கிடகின்றன
முழு சுவாசமற்று திணறுகிறது
உன்னை சுமந்தபடி
சுக பாரமிழுக்கும் என் இதயம் !

என் ஒவ்வொரு கிளைகளிலும்
நெளியும் உன் நினைவு
ஒரு மர்ம மண் புழுவென
என் இரவுகளில் நெளிந்து
என்னை தின்று தீர்க்கிறது !

கலி தீர்க்க நீ வரும்
விடியலுக்காக ஏங்கி
நத்தையின் மீது
கடிகாரங்கள் என
நகர்கின்றன
உன் துணையற்ற
என் துயரிரவுகள் .

(லம்பாடி கண்ணன் )

எழுதியவர் : (5-Apr-13, 12:57 pm)
பார்வை : 158

மேலே