திணற வைக்கும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம்...!

திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் பிரச்சினைன்னு நியூஸ் பார்த்தேன். ஆமாம் பங்காளிகளுக்குள்ள சண்டை வரத்தானே செய்யும். ஊர அடிச்சு திங்கிற பக்கீஸ்கள் வருமானம் வர்ற இடத்துல அடிச்சுக்கிறது நியாயம்தானே? ரொம்ப தொலைவுல இருந்து வர்ற ஆளுகளுக்குத்தான் கருவறைக்குள்ள இருக்க செந்தில் நாதன் டெர்ரரா இருப்பாரு அங்கனக்குள்ளயே பொழப்ப ஓட்டிக்கிட்டு இருக்க இந்த மாறி ஆளுகளுக்கு அவரு கல்லு சிலை கூடக் கிடையாது ச்ச்சும்மா சின்னப் புள்ளைங்க வச்சு வெளையாடுற டெடி பேர், மரப்பாச்சி பொம்ம மாதிரிதான். பின்னே பயம் இருந்தா நெஞ்ச நிமித்திக்கிட்டு பேசுவாய்ங்களா என்ன? அதுவும் அக்கிரமத்தை..

சூரபத்மன சூப்பர் ஹீரோவா நின்னு தமிழ்க் கடவுள் துவம்சம் பண்ணின இடமாச்சேன்னு எனக்கு திருச்செந்தூர் மேல எப்பவுமே ஒரு கிரேஸ் இருந்தது என்னவோ வாஸ்தவம்தான். கடல் வழியா வந்த அசுரன கடற்கரைய விட்டு ஊருக்குள்ள வர விடாம போட்டுத் தள்ளிட்டு ஸ்டைலா அவர் வேலை (வேலைன்னா ஜாப் இல்லை....வேல்...வேல்...வெற்றி வேல்!!!!) தூக்கி எறிஞ்ச இடத்துல இயற்கையா உருவான சுனையில (நாழிக் கிணறு) குளிக்க எக்ஸ்ட்ரா 5 ரூபா கொடுத்தா மூணு வாளி எக்ஸ்ட்ராவா கிடைக்கும் அப்படியே காசு வாங்கி தண்ணிய தலையில ஊத்துனாலும், அந்த இடம் கலீஜ்ஜாதான் இருக்கும்ன்ற அரசியல எல்லாம் இப்போ நான் பேசலை சார்...

சாமி கும்பிட போன இடத்துல எக்ஸ்பிரஸ், ஸ்பெசல், சாதா, சூப்பர் சாதான்னு போர்டு வச்சு அதுக்கு இம்புட்டு இம்புட்டு காசு கொடுக்கணும்னு பப்ளிக்கா போட்டு இருந்தத போட்டோ மட்டும் புடிச்சது தப்பா? எக்ஸ்பிரஸ் தரிசனத்துக்காக 250 ரூபாய் இருக்க வசதியானவங்க எல்லாம் இப்டிக்கா வாங்க, வக்கத்த பக்கிக எல்லாம் 20 ரூபாய் கொடுத்து அப்டிக்கா போங்கன்னு போட்டு இருந்தது நியாயம்தான்னு நம்ம பாழாப்போன அஞ்சறிவுக்கு எட்டாம....போட்டோ எடுத்தது தப்புன்னு என் மேல கொலை வெறியா பாஞ்ச அந்த கொளுக் மொழுக் குருக்கள் கிட்ட சண்டை வேற போட்டுக்கிட்டு இருந்தேன்.

சாமி பொதுதானே..? செந்தில் ஆண்டவர் ஏழைக்கும் பணக்காரனுக்கும் எகத்தாளம் புடிச்சவனுக்கும், குடுமி வச்சவனுக்கும், முழுக்க சிரைச்சவனுக்கும் ஒரே சாமிதானே? அப்புறம் எதுக்கு காசு இருக்கவன மட்டும் அவர் கிட்ட போய் பாக்க வைக்கணும்? 250 ரூபாய் காசு இல்லேன்னா என்னை தூரத்துல நின்னு பாருடா பக்கின்னு அவரா சார் சொன்னாரு? அவரே கோமணத்தோட ஆண்டிப்பண்டாரமா நயாப் பைசா இல்லாம நின்னவருதானே? தமிழ்க் கடவுளாச்சே...தமிழர்கள ஏன் சார் காசு இருக்கவன் இல்லாதவன்னு பிரிச்சு கிட்டயும் எட்டியும் நின்னு கும்பிடச் சொல்லணும்...? அப்படி சொன்னா என்னா சார் அவரு சாமின்னு கேட்டதுக்கு பதில் சொல்ல முடியாத குருக்கள் அண்ணாச்சி மந்திரங்கள மட்டுமே பொட்டத் தட்டு தட்டிருப்பாரு போல, நாம கேட்ட கேள்விக்கு ஒரு மண்ணாங்கட்டி பதிலும் சொல்லாம...

சார் இங்க போட்டோ எடுக்கக் கூடாது. அது பகவானா இருந்தாலும் சரி பப்ளிக் நோட்டீஸா இருந்தாலும் சரி எடுக்க கூடாதுன்னா கூடாதுன்னு என்கிட்ட எகிற ஆரம்பிச்சார். பொதுவா எல்லார் கண்ணும் படுறமாதிரி வச்சு இருக்க அறிவிப்பு பலகைய எடுக்க கூடாதுன்னு நீங்க எப்டி சொல்வேள்...நான் பிளாக்கராக்கும்(!!!!!)...இதை எல்லாம் சும்மா விடமாட்டேனாக்கும்னு பதிலுக்கு நானும் எகிற.. அந்த அர்ச்சகர் இதுக்குமேல இந்த அம்பிய நம்மளால சமாளிக்க முடியாதுன்னுட்டு என்னை அங்க டிக்கட் கொடுத்துட்டு இருந்த உயர்(!!!)அதிகாரிகிட்ட தள்ளி விட்டார்.

அதிகாரின்னாலே நம்ம ஊர்ல சிரிக்க கூடாது. அதுவும் இவர் குத்தகை எடுத்த அதிகாரி போல...என்னா சார் வேணும் ஒங்களுக்கு..இங்க போட்டோ எல்லாம் எடுக்க கூடாதுன்னு என்னை மிரட்ட ஆரம்பிக்க... 'அது இல்லிங்க சார் நான் கோயில் உள்ள எல்லாம் எடுக்கலை ஜஸ்ட் நீங்க போட்டு இருக்க அறிவுப்ப தானுங்க சார் எடுத்தேன்....ஆமா டிக்கட் கொடுத்துட்டு இருக்கீங்களே... நீங்க கவர்மெண்ட் சர்வெண்டா சார் 'னு கேட்டேன் ...அவ்ளோதான் வந்துச்சுப் பாருங்க அவருக்கு கோவம்...

சார்...கோயிலு கவர்மெண்ட் கோயிலு, சாமி கவர்மெண்ட் சாமி, நாங்களும் கவர்மெண்ட் ஆளுங்கதான்..ன்னு எகிறினாரு....

சாமி கவர்மெண்ட் சாமியா எப்டி சார் இருக்க முடியும்னு நான் சத்யராஜ் படமெல்லாம் பாத்த அனுபவ தெனாவெட்டுல கிண்டலா கேக்க அதிகாரி கடுப்பாகிப் போயி..இஷ்டம் இருந்தா வாங்க இல்லேன்னா வேற இடம் பாருங்கன்னு பிச்சைக்காரன விரட்ற மாதிரி விரட்டி வரிசையில போயி நின்னு டிக்கட்ட வாங்குங்கன்னு சைகையில சொன்னாரு....

கையில என் மகள பிடிச்ச மேனிக்கு சகதர்மினி 'போற வர்ற எடத்துல எல்லாம் அன்னியன் அம்பி மாதிரி ரூல்ஸ் பேசுதே இந்த மனுசன், இதுக்கு கிறுக்கு எதுவும் பிடிச்சுப் போச்சா என்னன்னு தெரியலயே'ன்ற மாதிரி....தேமேன்னு ஒரு பார்வை பாத்து " ஏங்க...ஏதாச்சும் ஒரு டிக்கட்ட வாங்கிட்டு வாங்க சீக்கிரமா... வந்தமா சாமியக் கும்பிட்டமா போனமான்னு இல்லாம எதுக்குங்க வந்த இடத்துல சண்டை எல்லாம்... இன்னும் கோயிலுக்குள்ளயே நாம போகலியே மாமான்னு கேட்டாப்டி....

சரி கிரகம் தொலையிதுன்னு...க்யூவுல டிக்கட் எடுக்க நிக்கையில தலைவர் படம் பாக்க நிக்கிற மேரியே ஒரு ஃபீலிங்கு எனக்கு... பி.பி எறங்காம 20 ரூபா டிக்கெட் எடுத்துக்கிட்டு தரை டிக்கட்ல முருகன பாக்கப் போயி, நான் கூட்டிட்டுப் போறேன் சாமி கிட்டக்கன்னு உள்ளுள்ள பிஸினெஸ் பேசின ஒரு குருக்கள அன்போட மறுத்துட்டு போன என்னை சரியா அரை நிமிசம் செந்தில் ஆண்டவர் முன்னால நிக்க வச்சுட்டு அங்க இருந்த அர்ச்சகர் நம்மள பிடிச்சு தள்ள அப்டியே பிரகாரம் விட்டு வெளியில வந்ததுதான் தாமதம்...

யாரோ ஒரு நல்ல மனுசன் குடம் புல்லா அர்ச்சனை பாலை வச்சுக்கிட்டு இருந்தவரு அய்யோ பாவம்னு இரக்கப்பட்டு ஒரு கிளாஸ்ல பால் கொடுத்தார். அட இந்தக் கோயில்ல நாம திருப்திப் பட்டுக்கிற மாதிரி இவராச்சும் இருக்காரேன்னு பெருமிதத்தோட புள்ளைக்கும் பொண்டாட்டிக்கும் ஆளுக்கு ஒரு வாய் பாலைக் கொடுத்துட்டு காலி டம்ளர அந்த புண்ணியவான் கிட்ட கொடுத்து ரொம்ப தேங்க்ஸ் சார்னு சொல்லிட்டு நகரப் போனேன்....அவ்ளோதான்...

கபால்னு கையப்புடிச்சு நிறுத்தி, என்னா சார் போறீங்க...? 20 ரூபா கொடுங்க சார்ன்னு அந்தப் புண்ணியவான் அன்னியனா மாறி முறைக்க...எ...எ..துக்க்ங்க சார் காசுன்னு நான் கேட்டதுக்கு....பாலை குடிச்சீங்கள்ள...அதுக்கு என்று தெனாவெட்டினார். அது நீங்கதானே கொடுத்தீங்கன்னு நான் சொல்ல...நீங்க ஏன் வாங்கினீங்கன்னு அவர் கேக்க...கொடுத்தா வாங்கத்தானே செய்வோம்னு நான் சொல்ல்ல...

மறுபடி அங்க வெடிக்க இருந்த ஒரு கலவரத்தை ஓரமா நின்னு அப்பாவியா வேடிக்கைப் பார்த்துட்டு இருந்த பொண்டாட்டிக்காகவும் பிள்ளைக்காகவும் கேன்சல் பண்ணிட்டு இருபது ரூபாயை தேடிப் பிடிச்சு கொடுத்துட்டு நடந்து போயிட்டு இருக்கும் போது சத்தியமா சூரபத்மன முருகன் வதம் செய்த கதையோ, முருகனோ, தமிழோ, பக்தியோ, பாசமோ, அமைதியோ, எந்த வித தாக்கமும் எனக்கு இல்லை. என்ன ஒண்ணு ஒரே பயமா இருந்துச்சு....அடுத்து எவன் என்ன கேப்பானோ எப்டி எஸ்கேப் ஆவுறதோன்னு....

இப்போ பாத்துக்கிட்டீங்கன்னா கோயில் அதைச் சுற்றி இருக்கும் மக்கள்னு அவுங்க வாழ்க்கை அதைச் சார்ந்துதான் இருக்கும்ன்றத நாம ஏத்துக்கிட்டுதான் ஆகணும் ஆனா அதுல ஒரு தர்மம் இருக்கணும் இல்லையா..? ஆளாளுக்கு டீலிங்க் பேசுறதுக்கு அது என்ன வாரச் சந்தையா...? இல்லை... மன நிம்மதிக்காக வந்து போற கோயிலா?

அதுவும் இல்லாம டாஸ்மாக்ல கோடி கோடியா சம்பாதிக்கிற கவர்மெண்ட்... சாமி கும்பிட வர்ற இடத்துலயாச்சும் ஏழை பணக்காரன்ற பாகுபாடு இல்லாம ஒரே மாதிரியா மனுசங்கள டீல் பண்ணினா என்ன? காசு கூட கொடுக்குறவன் கிட்டப் போயி பாக்கலாம்ன்னு எந்த சாமி சொன்னுச்சுன்னு எவனாலயாச்சும் சொல்ல முடியுமா? கோயிலுக்கு உள்ள போறதுக்கு முன்னாலயே அச்சச்சோ நம்மகிட்ட காசு இல்லேயேன்னு ஒரு மனுசன மனசுக்குள்ள புலம்ப வைக்க எந்த தெய்வமும் ஒத்துக்காது.. அப்படியே ஒத்துக்கிட்டாலும் அதுக்குப் பேரு கடவுள் இல்லை சாத்தான். சத்தியமா காஷ்மீர் பார்டர சுத்தி வர்ற ஒரு பதட்டத்தோட என் முதல் திருச்செந்தூர் கோயில் பிரவேசம் முரட்டுத்தனமா நடந்து முடிஞ்சது.

கோயிலுக்கு வெளியில வந்து சட்டைய மாட்டிக்கிட்டு வேட்டிய இறுக்கமா கட்டிக்கிட்டு நடந்துக்கிட்டு இருக்கப்ப ஒரு ஆத்தா கையில கோலோட வந்து குறி பாக்குறேன் சாமி உங்களுக்கு வந்த கஷ்டம் எல்லாம் தீந்து போச்சுதுன்னு சொல்லவும் நான் திரும்பவும் கோயில ஒரு லுக் விட்டுக்கிட்டே பாசமா பேசுன அந்த ஆத்தா திருப்திக்காக கை ரேகை பார்க்க ஒக்கார்ந்தேன்...

மூத்தது பொண்ணு ....அடுத்து முருகன் வந்து பொறக்க போறான்...முருகன் வந்து பொறக்கப் போறான்னு ஆத்தா ஆருடம் சொல்லவும்... அது ஒண்ணுதான் கொறைச்சல்...ஏற்கெனவே கல்யாணம் ஆன புதுசுல பழனில முருகன் பொறப்பான்னு ஒரு அக்கா சோசியம் சொன்னிச்சு...இந்த முருகாயி வந்து பொறந்தா...மறுபடியுமா....

பொறவு என்ன..

நல்லா சாப்டு ஆத்தான்னு... ஆத்தா கையில 100 ரூபா காசைக் கொடுத்துட்டு.... கோயிலுக்குள்ள இருக்க ஆளுகள மட்டுமாச்சும் நல்லபடியா காப்பாத்துய்யா எங்கய்யா முருகையான்னு நேந்துகிட்டு ஊரப்பாக்க வந்து சேந்தோம் அம்புட்டுதேன்...!

எழுதியவர் : Dheva.S (24-Apr-13, 2:56 pm)
பார்வை : 205

சிறந்த கட்டுரைகள்

மேலே