எங்கப்பா போன
எங்கப்பா போன
எங்கள தனியாக விட்டிட்டு
அம்மா அழுதபடியே கிடக்கிறா
வீட்டின் ஒரு மூலையில
நாலு நாளா
அம்மா எதுவும் சாப்பிடவுமில்ல
கண் மூடி தூங்கவுமில்ல
சுவரோடு சாய்ந்தபடி சிலையாயிருக்கா
இப்ப எல்லாரும் என்ன
அப்பன முழுங்கினவனே
அநாதைப்பயலே
என்றுதாம்பா கூப்பிடுறாங்க
அவங்க என்ன கூப்பிடும்
அர்த்தம் எனக்கு புரியல
ஆனா ஒண்டு மட்டும் தெரியுது
அவங்க என்ன திட்டுறாங்க என்று
உன்ன எங்கே என்று
நானும் கேட்டா
அம்மா சொல்றா
நீ கடவுளப்பார்க்க போயிட்டியாமென்று
அப்பா
உன்ன பார்க்காம என்னால
இங்க இருக்க முடியல
இவங்க கதைக்கிறத்தையும் கேட்கமுடியல
நீ எவ்வளவு சீக்கிரம் வரமுடியுமோ
அவ்வளவு சீக்கிரம் வந்திடுப்பா
வரும்போது மறக்காம கடவுள்ட
எனக்கு என்னயாவது பரிசு வாங்கிட்டுவாப்பா