சிரித்திரபுரம் - 6

காட்சி - 10

பெளர்ணமிக்கு அடுத்த தினம். விரிஞ்சிபுரம் கோட்டைக்கு எதிரில் வில்லவ நாட்டு அரசன் படைகள் சுற்றி வளைத்து கூடாரமடித்திருக்கின்றனர். அதில் அலஙகாரமான கூடாரம் ஒன்றினுள் வேலைப்பாடமைந்த நாற்காலியில் அமர்ந்திருக்கும் வில்லவ நாட்டு மன்னன் போதை திருமனை சந்தியுங்கள்.

போதை : (ஒரு சிட்டிகைப் பொடியை மூக்கில் உறிஞ்சியபடி) என்ன கொடுமை...! மதிய உணவு நேரம் நெருங்கியும் இன்னும் உணவு வந்த பாடில்லை. போர் முற்றுகை என்பதால் சமையல் கலைஞர்களை விரட்டவும் முடிவதில்லை. போர் என்றாலே துன்பம் என்று இதைத்தான் சொல்வார்கள் போலும்...


அவன் தளபதி சூரராஜேந்திரன் கூடாரத்தினுள் நுழைகிறான்.

சூர : அரசே! ஒரு விண்ணப்பம்...!

போதை : ஆஹா... தின்ன அப்பம் கொண்டு வந்திருக்கிறாயா? கொடு... நல்ல பசி எனக்கு!

சூர : (ஙே என்று விழித்தபடி) அரசே...! தின்னுகிற அப்பத்தைச் சொல்லவில்லை. இது விண்ணப்பம்!

போதை : பசி நேரத்தில் என்னய்யா விண்ணப்பம்? சரி, சொல்லித் தொலை!

சூர : நாம் முற்றுகையிட்டு ஒரு நாள் கடந்து விட்டது. எதிரி மண்ணு மாதிரி உள்ளேயே இருக்கிறான். அவன் நாட்டு மக்கள் சிலரைப் பிடித்து வந்திருக்கிறேன். அவர்களைக் கொன்று உடல்களை அவன் கோட்டையில் வீசட்டுமா?

போதை : (ஒரு விரலளவு பொடியை மூக்கில் உறிஞ்சியபடி) சேச்சே...! பொடி மக்களை... மன்னிக்க, குடிமக்களை எதுவும் செய்யக் கூடாது. இன்னும் ஒரு நாள் பொறுப்போம். அவனிடமிருந்து ஏதும் செய்தி வராவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்து விடலாம்.

சூர : இரண்டில் ஒன்று பார்ப்பது என்றால்... என்ன சொல்கிறீர்கள் மன்னா?

போதை : ஒன்று நாம் அவர்களைத் தாக்கி வெற்றியைப் பெற வேண்டும். அல்லது...

சூர : அல்லது...?

போதை : வெற்றியை அவர்களுக்கே கொடுத்து விட்டு, நாம் நம் நாட்டுக்கே திரும்பிவிட வேண்டும். அதைத்தான் இரண்டில் ஒன்று என்றேன்.

சூர : (தலையில் அடி்த்துக் கொண்டு) ஐயோ...! உங்களை போர்க்களம் வரை இழுத்து வருவதற்கே எனக்கு மூச்சுமுட்டி விட்டது. இங்கே வந்து இப்படியெல்லாம் நீங்கள் பேசுவது தெரிந்தால்... எதிரி தைரியம் பெற்று விடுவானே! அவனை வென்று அவனிடமிருந்து கப்பம் பெற வேண்டாமா?

போதை : (கோபமாக) பிசாசுக்குப் பிறந்தவனே! ஏனடா பசி நேரத்தில் திரும்பத் திரும்ப அப்பத்தை நினைவுபடுத்துகிறாய்?

ஒரு காவலன் வேகமாக உள்ளே நுழைகிறான்.

காவ : அரசே! எதிரியிடமிருந்து தூது வந்திருக்கிறது.

போதை : ஆஹா...! புறாவைத் தூது அனுப்பியிருக்கிறானா? உடனே அதை வறுத்து எடுத்து வா!

காவ : (பீதியுடன்) புறா அல்ல அரசே! வந்திருப்பது யானை...!

போதை : என்னது...? யானையா? எங்கே, வரட்டும். பார்க்கலாம்!

காவலன் செல்ல, சற்று நேரத்தில் அமைச்சர் தெய்வயானை உள்ளே நுழைகிறாள்.

தெ.யானை : வணக்கம் அரசே! எங்கள் மாமன்னர் உங்களுக்கு ஒரு ஓலை விடுத்துள்ளார்...! (நீட்டுகிறாள்)

போதை : தளபதியாரே...! அவன் எழுதியிருப்பதைப் படியும்!

சூர : (மனதிற்குள்) ஹும்..! கல்விச்சாலைக்கு ஒழுங்காப் போயிருந்தா நீரே படிச்சிருக்கலாம். (ஓலையை வாங்கிப் படிக்கிறான்) ‌வில்லவ மன்னா! உன் படைகளை எல்லாம் திரட்டி வந்து என் கோட்டை முன் உட்கார்ந்து விட்டாய். முன்யோசனையுடன் என் மகனின் படைகள் போன வாரமே புறப்பட்டு சுற்று வழியாகச் சென்று நீ கிளம்பியதும் உன் நாட்டைக் கைப்பற்றி விடச் சொல்லி அனுப்பி விட்டேன். இந்நேரம் அவன் படைகள் உன் நாட்டை நெருங்கியிருக்கும்.. உடனே நீ அங்கு திரும்பிச் சென்றால் உன் நாடு உனக்குக் கிடைக்கும். இல்லாவிட்டால் இரண்டு நாடுமற்று நீ நாடோடியாய்த் திரிய வேண்டியதுதான். எம் மக்கள் பஞ்சத்திற்குப் பழக்கப்பட்டவர்கள். வருஷக்கணக்காய் நீ முற்றுகையிட்டாலும் தாங்குவோம். நீதான் பாவம்... பசி தாங்காமல் உயிரை விடுவாய்!

போதை : ஆஹா...! பட்டினியில் உயிரை விடுவதா? என்ன சோதனை சூரா இது? பேசாமல் நாம் படைகளுடன் பின்வாங்கி விடலாமா?

சூர : என்ன... பின்வாங்குவதா? வேதனை...! மன்னா...! சோதனை வந்தால் அதிலிருந்து தப்ப மாற்று வழிதான் யோசிக்க வேண்டும். இன்றிரவு தாக்குதல் நடத்திவிட வேண்டியதுதான்.

தெ.யானை : ஒருக்கால் நீங்கள் இப்படிப் பேசினால், உங்களிடம் ஒப்படைக்குமாறு எம் மன்னர் மற்றொரு ஓலையும் தந்திருக்கிறார். (தருகிறாள்).

சூர : (படிக்கிறான்) போதை திருமா! பின்வாங்க மறுத்து நீ போரிடத் துணிந்து விட்டாயா? என் அமைச்சர் தெய்வயானையை இக்கணமே உன் முன் பரதநாட்டியம் ஆடச் சொல்லியிருக்கிறேன். அவள் ஆடினால் நிலநடுக்கம் ஏற்பட்டு, உன் யானைகள் வெறி கொண்டு உன் படையையே சட்னி ஆக்கி விடும். நாசங்களுக்கு நான் பொறுப்பாளியல்ல. தொலைந்து போ! -இப்படிக்கு மணிமாற பாண்டியன்.

தெ.யானை : மன்னா! என் நாட்டியத்தைத் துவங்கட்டுமா? (அபிநயம் பிடித்து ஒரு குதி குதிக்கிறாள். கூடார நிலம் அதிர...)

போதை : (திகிலுடன்) ஐயோ, வேண்டாம்... தளபதி! நம் படைகள் இக்கணமே பின்வாங்கட்டும். இது எமது உத்தரவு! யானை! நான் இதோ கிளம்பி விட்டேனென்று உன் மன்னனிடம் சொல்...! கூடார வாயிலை நோக்கிச் செல்ல... தெ.யானை ஹா... ஹா.. வென்று உரக்கச் ‌சிரிக்கிறாள். அவன் ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது.

காட்சி - 11

மன்னர் மணி சிம்மாசனத்தி்ல் அமர்ந்திருக்க, எதிரே மந்திரி பிரதானிகள் அமர்ந்திருக்கின்றனர்.

மார்த் : மன்னா...மழை வரும் என்று தோன்றுகிறது. எங்கோ தொலைவில் இடி இடிக்கும் சப்தம் கேட்கிறதே..!

மணி : அது இடி சப்தமல்ல... சிரிப்பு சப்தம்! நிலம் அதிர்கிறது... இதிலிருந்தே புரியவில்லையா? அமைச்சர் யானை சிரித்தபடி வந்து கொண்டிருக்கிறாள்.

மணி சொல்லி முடிப்பதற்குள், ஹா... ஹா...வென வாய்விட்டுச் சிரித்தபடி உள்ளே நுழைகிறாள் தெய்வயானை.

தெ.யானை : வெற்றி! வெற்றி! எதிரி தலைதெறிக்கப் பின்வாங்கி ஓடிவிட்டான். வேந்தே! உங்களுக்கே ஜெயம்!

மணியின் அருகில் அமர்ந்திருக்கும் அரசி புவனமுழுதுடையாள் சந்தேகமாக மணியைப் பார்க்கிறாள்.

புவன : என்னது..? ஜெயமா? யாரவள்?

மணி : நாசமாப் போச்சு. நீ நினைக்கிற மாதிரி எதிரி நாட்டுப் பெண்ணில்லை. வெற்றி என்பதை அவள் வேறு வார்த்தைகளில் சொல்கிறாள். மிக்க மகிழ்ச்சி யானை! உன் உதவியால் கிடைத்த இந்த வெற்றிக்கு எமது பரிசை இதோ பெற்றுக் கொள்!

-என்று ஒரு முத்துமாலையைப் பரிசளிக்கிறான். அவள் மகிழ்வுடன் பெற்றுக் கொள்கிறாள்.

அவைக்கவிஞர் : வில்லவனை வென்ற விறல் வேந்தர்... வாழ்க. ••

மணி : இப்போதுதான் புறாத் தூது வந்தது. அமைச்சர் சாத்தனார் ஜெயபுரியிலிருந்து சிவப்புக் கற்களை வாங்கி அனுப்பியிருக்கிறாராம். வந்து சேர்ந்ததும் துரிதமாய் மாளிகை வேலைகள் துவங்கப்பட வேண்டும். நாளை அது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட உத்தேசித்துள்ளேன். காலையில் அனைவரும் தவறாது வந்து விடுங்கள். இப்போது சபை கலையலாம். (போகிறான்.)

-தொடரும்...

================================
•• ஆதாரம் : செங்கழுநீர் வளவனார் இயற்றிய ‘மணிமாற பரணி’ என்ற நூல். (ஹி.... ஹி...)
================================

எழுதியவர் : (10-Sep-13, 10:56 am)
சேர்த்தது : nilamagal
பார்வை : 90

மேலே