விதி என்ன செய்யும்...?

வீறிட்டு அழும் குழந்தை
வீசி எறியப்பட்டால்
விதி என்ன செய்யும்...?

மங்கையவள் உன் சுமை தாங்க
வரதட்சனைதான் வேண்டுமென்றால்
விதி என்ன செய்யும்...?

வியர்வை சொட்ட உழைத்தவன்
உண்ண உணவில்லையெனில்
விதி என்ன செய்யும்...?

மனிதம் சாகடித்து
மண்ணில் தான் புதைத்து விட்டால்
விதியும்தான் என்ன செய்யும்...?

மது உட்கொண்டு
மதி கெட்டுப் போனால்
விதி என்ன செய்யும்...?

மாது மயக்கத்தில்
மழுங்கிப் போனால்
விதி என்ன செய்யும்...?

புகைக்குள் நீ மூழ்கி
புண்ணாகிப் போனால்
விதி என்ன செய்யும்...?

ஆக்க கொடுத்த ஒன்றை
அழிக்க மட்டுமே கற்றுக்கொண்டால்
விதி என்ன செய்யும்...?

அத்தனையும் செய்தாய்
அபத்தமாய் பழிபோட்டாய்...
விதி செய்த சதியென்று...

விதித்தவன் கடவுளென்றால்
ஆயிரம் கோபுரம் உள்ளதடா...
விதியும் ஆங்கே வாசம் கொள்ளுதடா...

பரிகாரமாய் ஆடும் வேண்டாம்...
அப்பாவி சேவல் வேண்டாம்...
மழுங்கிப்போன புத்தியை தீட்டு...

புது மனிதனாய் வெளியுலகம் கண்டு
இப்போது கூறடா...
என் மதி இருக்கையில் விதி என்ன செய்யும்...

எழுதியவர் : ராஜதுரைமணிமேகலை (10-Oct-13, 2:55 pm)
பார்வை : 98

மேலே