அன்னையே போற்றி

எப்போதும்
எதையாவது
எதிர்நோக்கியே
வாழும்
இம்மண்ணுலகில்
அன்பை மட்டும்
எதிர்நோக்கிய
அரனே !

முளைக்கும் முன்
முற்றுப்புள்ளி வைக்க
முயல்பவர்களின்
மனதிலும்
அன்பை
விதைத்தவளே !

தரிசாய் கிடந்த
மண்ணில்
எதையும்
எதிர்பாராமல்
விதைத்தாய்
அன்பை !

மண்ணை பற்றிய விதை
வீ ரியம் கொண்டதடி
ஆணி வேர் பதித்து
ஆணவம் கொண்டதடி
படர்ந்த கிளைகளும் தாம்
போட்டியிட்டதடி
அசைத்தாலும்
ஆணிவேரை
இசைந்தாடும்
இந்த விழுவேர்கள்
வீழாது காக்குமடி
அன்பெனும்
ஆலமரத்தை !
நான் கொண்டாடும்
ஆலயத்தை !

படர்ந்த ஆலமரம்
பறவைகளின்
சரணாலயமாகுமடி
ஆ - நாதையாய்
பிறந்த உள்ளம்
அயர்ந்ததடி
அன்னத்தின்
மடியில் !

அன்னையே
போற்றி ! போற்றி !
அன்பின் அர்த்தமே
போற்றி ! போற்றி !

எழுதியவர் : விஜயகுமார்.து (3-Dec-13, 1:16 pm)
பார்வை : 111

மேலே