மறுதாயை மறுத்தாய்

இரண்டு நாட்கள் தள்ளிப் போனது
மூன்றாம் நாள் உறுதி ஆனது

வேண்டாம் வேண்டாம் என்றிருந்தான்
இருந்தும் இரவினில் சேர்ந்திருந்தான்
ஏதோ ஒருநாள் கவனமின்றி
என்னை அவனுடன் இணைத்துக்கொண்டான்

அணைக்கும் போதும் பற்றிக்கொள்ளும்
கருவெனும் திரியினை உசுப்பி விட்டான்
நனைந்து நனைந்து எரியும் சுகத்தில்
அவனின் நகலினை பதிந்து விட்டான்

நாற்று நடப்பட்ட நாணத்திலே
நாள் தள்ளிப் போனதை மறைத்துவிட்டேன்
நான்காம் மாதம் நெருங்குமுன்
நானே அவனிடம் சொல்லி விட்டேன்

வேண்டாம் என்றே ஆணையிட்டான்
கருவை வேருடன் அழிக்கச் சொன்னான்
மகனா அவனா தெரியாமல்
மருத்துவமனைக்கு கிளம்பி விட்டேன் !!

எழுதியவர் : அகமுகன் விஜய் (18-Dec-13, 1:39 pm)
பார்வை : 73

மேலே