தமிழா டமீலா - நாகூர் கவி

அம்மா என்னும் சொல்
மம்மியாய் மாறியது
அப்பா என்னும் சொல்
டாடியாய் மாறியது... !

பாட்டி என்னும் சொல்
கிரேன்மாவாய் மாறியது
தாத்தா என்னும் சொல்
கிரேன்பாவாய் மாறியது... !

அத்தை ஆன்ட்டியாகியது
மாமா அங்கிளாகியது
ஐயா சாராகியது
திருமதி மிஸ்ஸாகியது... !

அந்நிய நாட்டுக்காரன் பிள்ளைகளுக்கு
தமிழில் பெயரைச்சூட்டி மகிழ்கின்றான்
தமிழன் வீட்டுப்பிள்ளைகள் பெயரோ
தூயத் தமிழில் இல்லையே... !

தமிழ் சொல்லில் மணமில்லையோ...?
தமிழில் பேச மனமில்லையோ...?
தமிழை நாவால் பேசினால்
தமிழனுனக்கு கௌரவத் தொல்லையோ...?

உனக்கு ஆங்கிலம்மேல் மோகமடா...?
தம்பி தமிழின்மேல் கோபமடா... ?
உன்னைச் சொல்லி குற்றமில்லை
உண்மையை உணர நேரமில்லை...!

எழுதியவர் : நாகூர் கவி (4-Jan-14, 1:59 pm)
பார்வை : 289

மேலே