உலக தமிழர்களிடத்தில் ஒற்றுமை

எந்த மண்ணில் பிறந்தாலும்
எந்த மொழியில் வாழ்ந்தாலும்.
சொந்தம் ஒன்று உணர்விலும்
முந்தும் தமிழ் உறவாகும்.

இடையில் வந்த உறவெலாம்
கடையில் பெற்ற பொருள் போலாம்.
கருமூல உணர்விலும்
கலந்து வந்ததும் தமிழாகும்.

முதல் மொழிந்த அம்மா சொல்
முழு உலகின் முதல் சொல்.
தரணி எங்கும் தமிழ் உணர்வு
நிறைந்திருந்த தாக்கம் அது.

வாய் பேசும் மொழியெலாம்
தாய் சொன்ன மொழியாமோ!
மண்ணிலே விழும்போதும்
சொல்லி அழும் தமிழன்றோ!

பிழைப்புக்காக இடம் மாறி
பேசுவதும் நம்மொழியோ!
பிழை காணப் பொறுப்போமோ!
பின்னும் முப்பத்துக் கோடியோ!

காற்றுள்ள இடமெங்கும்
கன்னித் தமிழ் வாழ்ந்திருக்கும்.
வேற்றுவர் முட்டும்போது
வீரம் காட்டி வென்றிருக்கும்


---கொ.பெ.பி.அய்யா.
20 சனவரி 2014

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (20-Jan-14, 3:09 pm)
பார்வை : 112

மேலே