காதல்செய்தல் பாவமல்ல தவறும்அல்ல

இயற்கையன்னை தந்தகொடையே இன்பவாழ்க்கையாம்! - அதுதான்
இன்பதுன்பம் என்பதெல்லாம்
இணைந்தவாழ்க்கையாம்!

உயிர்களெல்லாம் இணைந்திணைந்து
உலகவாழ்விலே - மண்ணில்
உயிர்நிலைக்க வேண்டுமென்ற
உயர்ந்த நோக்கிலே;
முன்னவர்கள் ஆய்ந்தறிந்து
முறைவகுத்தனர் - அதுவே
மூன்றுகால மும்நிலைக்க
விதிசமைத்தனர்!

ஆணும்பெண்ணும் தாமிணைந்து
கணவன்மனைவியாய் - ஆன்றோர்
ஆக்கிவைக்கத் திருமணத்தை
அமைத்துவைத்தனர்!

ஆண்பெண்ணென்ற இரண்டுசாதி
தவிறஉலகிலே - அவர்கள்
ஆயிரக்க ணக்கில்சாதி
அமைக்கவில்லையே!
ஆதலாலே இளையர்கூட்டம்
அந்தநாளிலே - தம்முள்
அமைந்தஇயற்கைக் காதலாலே
மனம்கலந்தனர்!

காதலிற்குள் இணைந்தஇளையர்
மணக்கவிரும்பினால் - ஆன்றோர்
காதல்தன்னைப் போற்றிஅவருள்
மணமுடித்தனர்!

காலம்மாறிப் பொருள்வெறிக்கு
அடிமையானதால் - நம்முள்
கலந்திருந்த மனிதம்நீங்கிக்
கரைந்துபோனதே!
உயர்ந்தசாதி தாழ்ந்தசாதி
என்றமமதையால் - நமக்குள்
ஒன்றிநின்ற காதல்நீங்கிச்
செல்வம்புகுந்தது!
அன்றிலிருந்து காதலென்ற
அமுதஅருவியும் - நம்முள்
அளவிலாவெ றியைத்தூண்டும்
காமம் ஆனது!

உண்மைக் காதல் உங்கள்நெஞ்சில்
தோன்றும் போதிலே - மனங்கள்
ஒன்றிக் கலந்து செம்மண்மழைபோல்
உறவில் இழையுமே!

உங்களுக்குள் உள்ளுணர்வு
தேர்ந்தெ டுத்திடும் - காதல்
ஊறித்ததும்பும் பெண்ணின்மீது
உயிரைவையுங்கள்!

அவளினழகில் அளவில்நீங்கள்
கொள்ளும்போதையும் - காதல்
அல்லஅல்ல மதுவின்தீய
காமம் ஆகுமே!

உண்மைக்காதல் கொண்டநெஞ்சம்
உறுதியாகுமே - அதனில்
உலகவாழ்வில் சாதனைக்கு
உணர்ச்சிஏறுமே!

உண்மைக்காதல் உருவைமாற்றிக்
கலைஞனாக்குமே - உம்முள்
ஊறிச்சுடரும் சக்தியாலே
உலகைவெல்லுமே!

உண்மைக்காதல் இன்பதுன்பம்
எதிலுமுங்களை - இழைந்து
ஓய்விலாத தாய்மையமுதை
ஊட்டிக்காக்குமே!

ஆதலாலே காதல்செய்தல்
பாவமல்லவே! - நெஞ்சில்
ஆழ்ந்தஉண்மைக் காதல்கொள்ளல்
தவறுமல்லவே!
-------------------------சித்திரைச் சந்திரன்

எழுதியவர் : சித்திரைச் சந்திரன்---(சந் (27-Jan-14, 9:01 pm)
பார்வை : 136

மேலே