நெஞ்சம் கொதிக்கிறதே 2 கனவோ நனவோ

==இது ஒரு உண்மையின் கற்பனை--==

கண்கொண்டுபார்க்கவே கூசும் - அக்
காட்சிப்படங்களைப் பார்ப்பவர் நெஞ்சம்
புண்பட உள்ளமும் நோகும் - தேகம்
புல்லரித்தே கூட அச்சமும்கொள்ளும்
விண்கண்ட ஓலங்கள் யாவும் - வான
வீதியிலே எங்கும் கேட்பது போலும்
எண்ணம் பிரமித்து நிற்கும் - அங்கே
என்ன நடந்தது காணவிழைந்தேன்

நட்ட நடுநிசி நேரம் - ஒரு
நாளில் துணிவுடன் சென்றுமடைந்தேன்
கொட்டும்மழை பெய்தபின்பு - பனி
கூதலிடப் புகைபோலும் நிசப்தம்
வட்டமதி மேலே நிற்க - அதன்
வீசுமொளிதனில் சென்ற இடமோர்
வெட்ட வெளிப்பிரதேசம் - அதில்
வீடுகள் இன்றில்லை யென்பதைக் கண்டேன்

சில்லென்ற காற்றுத் தழுவ - அதில்
தீயெரிந்த புகை வாசமும் வீச
கொல் எனவே ஒருசத்தம் - மனம்
கொஞ்சம் திடுக்குற்று யாரெனப் பார்த்தேன்
நில்லென மேனி பதற - அங்கு
நீசரின் கண்படின் நானில்லை யென்றே
மெல்ல மரமொன்றின் பின்னே - எந்தன்
மேனி மறைதங்கு சூழலைப் பார்த்தேன்

அல்ல அது வெறும் பிரமை - கண்டு
அஞ்சுதல் விட்டதன் பின்பு நடந்தேன்
கொல்ல வந்தவரும் அன்றோ - இந்தக்
கும்மிருட்டில்நின்று மெய்கிழித்தாடி
பொல்லாக் கொடுமைகள் செய்தார் - இந்த
பூமி அதை வாழ்த்திப் போனது மேனோ
நல்லவர் போலிங்கு வந்தார் - கொன்ற
நாளிலே மாறிக் கொடுமைகள் செய்தார்

செல்லென விட்ட விதியும் - அதை
சேர்ந்தே இழைத்தவர் செய்பாவம் தானும்
கொல்லக் கொல்லப் படம்செய்து அவர்
கொன்ற அழகினை மெய்ரசித்தேங்க
எல்லையிலே வெகுதூரம் - அந்த
ஏற்றமிகு நாடும் செய்மதி கொண்டே
துல்லிய மாகப் பிடித்தும் அதைத்
தூக்கிப் பரணிடை போட்டு மறைத்தார்

(தொடர்சி பார்க்கவும்)

எழுதியவர் : கிரிகாசன் (18-Feb-14, 1:47 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 78

மேலே