நீ காதலித்தால் மட்டுமே

ஏக்கக் கவிதைகளை
எழுதிக் குவித்திடும்
என்னுடைய பார்வைகள்...

எதற்கென்றே தெரியாமல்
உன்னைப் பார்த்தால் புன்னகைக்கும்
என்னுடைய உதடுகள்...

எங்கோ நீ இருக்க
கனவினிலே உனை அணைத்து
கசக்கிப் பிழிந்திடும்
என்னுடைய நினைவுகள்...

நினைவுகளின் அணிவகுப்பில்
உன்னையே மீண்டும் மீண்டும்
வண்ணந் தீட்டிப் பார்த்திடும்
என்னுடைய எண்ணங்கள்...

எதிலென்று தெரியாமல்
அதற்குள்ளே சிக்கி
விடுபட முடியாமல்
தவித்துத் துடித்திடும்
என்னுடைய உணர்வுகள்...

வாய்க்காலாய் ஓடி
வடிகாலைத் தேடி
அங்குமிங்கும் அலைமோதும்
என்னுடைய தாபங்கள்...

ஈரமாய்க் காற்றடித்தும்
இதயத்தில் தீப்பிடித்தும்
நெருப்பைத் தேடி அலைகின்ற
என்னுடைய தாகங்கள்...

ஆழ்ந்ததோர் அமைதியிலும்
அலைகடலின் சப்தத்தை
தனக்குள்ளே பிரசவிக்கும்
என்னுடைய இளநெஞ்சம்...

கனவுக் கரையான்களால்
நினைவுகள் அரிக்கப்பட்டும்
மீண்டும் மீண்டும் மெருகேறும்
என்னுடைய கவிதைகள்...

ஏனென்றே தெரியாமல்
எதற்கென்றே புரியாமல்
வார்த்தைகளைக் கோர்த்துக் கோர்த்து
ஏதேதோ சிலை செதுக்கும்
என்னுடைய விரல்கள்...

இவையெல்லாம்
உன் புன்னகையின் தாக்கங்கள்...

நீ
காதலித்தால் மட்டுமே
கனம் பெறும் ஜீவன்கள்!

எழுதியவர் : மனோ & மனோ (26-Feb-14, 3:54 pm)
பார்வை : 133

மேலே