மின்னி போகும் பள்ளிப் பருவ நினைவு

எண்ணப் பறவையை
பின்னோக்கி விடுகிறேன்
மின்னிப் போகிறது
என்-பள்ளி பருவம்

மிதிவண்டி தேவதைகள்
வீதிவலம் போகையிலே
பாதிசோறு விட்டுவிட்டு
நதிபோல ஓடினோமே....!

பள்ளிக்கு முழுக்கு போட்டாலும்
நண்பன் அவன் காதலுக்காய்
தனிவகுப்பு தவறாமல் சென்றோம்
தூதுவனாய் குதுகலம் செய்தோம்.......!

விடைத்தாள் வரும் நாளெல்லாம்
கொலை செய்தோம் மீள்முறை
வடைசுட்டு போடாது
இறந்தநம் பாட்டிகளை....!

விலங்கியல் பாடத்தில்
தூங்கிய தோழனை
இலக்கண கேள்விகேட்க
தூண்டிவிட்டு சிரித்தோம்...

முதல்வரிசை சித்ரா
கேள்விகேட்க முற்பட்டால்
மொத்தமாய் எல்லோரும்
சத்தமிட்டு தடுத்தோமே.....!

பாலின எல்லைகோடு - மரப்
பலகைகளின் இடையே
பலசுற்று பேச்சுவார்த்தை
வகுப்பறை வெளியில் செய்தோம்..!

முளைக்காத மீசையிடம்-தினம்
சளைக்காமல் சண்டையிட்டோம்...-விடை
எழுதிவைத்த மேசைக்காக-உயிர்த்
தோழனிடமும் சண்டையிட்டோம்.....!

திசை சேர்ந்து போகாதா?-நாம் சுற்றி
திரிந்த காலம் திரும்பாதா.....?

எழுதியவர் : காசி. தங்கராசு (20-Mar-14, 3:50 am)
பார்வை : 481

மேலே