தமிழா தமிழனுக்கு குரல் கொடு

காலம் வருமென காத்திருந்தோம்
காலன் அவர்களை அழைக்கும்வரை
இதயம் உள்ளவராக இருப்பாரென்று
இந்தியர்களை இதுநாள் நினைத்திருந்தோம் ..

இந்தியாவை நடத்தும் அரசாங்கம்
இரக்கமில்லா அரசாங்கம் இதுவென்று
எத்தனைப்பேர் நினைத்திடுவார் இவ்வுலகினில்
எத்தனைக்கண்ட புத்தனைப் போல ...

இரக்கம்கொண்ட புத்தமத தத்துவத்தை
தன்னாட்சியில் கொண்டநாடு இலங்கையென
புத்தகத்தில் படித்ததுண்டு சிறுவயதினில்
புத்திமாறிவிட்டனரோ ஈழத்தமிழர் வாழ்க்கையிலே

எதனைக்கொண்டு இதயத்தை மறந்தனரோ
இவர்களும் மனிதஇனமென எண்ணாமல்
மனிதஇன படுகொலையினை கட்டவிழ்த்திட்ட
மந்தைகளங்கே இலங்கை அரசாங்கமென ...

இருப்பதை அனைவரும் பகிர்ந்துகொண்டால்
பிரிவினைக்கு அங்கே வேலையில்லை
இந்த உண்மையை உணராத
இலங்கை அரசாங்க மேதாவிகள் ..

தமிழர்களை இலங்கையின் குடிமக்களாக
எண்ணாத இலங்கையின் அரசாங்கம்
தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகள்
எண்ணாத தமிழனில்லை இவ்வையகத்தே ...

தமிழின மக்களை கொலைசெய்திட்ட
தமிழ்நாட்டு மீனவர்களையும் படகுகளையும்
சிறைப்பிடித்து நம்மை கொடுமைப்படுத்தும்
இலங்கையின் கொடிய இராணுவமே ...

இலங்கை செய்யும் கொடுமைதனை
இவ்வுலகநாடுகள் அனைத்தும் எதிர்த்தப்போதும்
இதயமில்லா இந்திய அரசு
இரட்டை வேடம் போடுவதென்ன ..

இன்று இலங்கை தமிழர்களுக்கு
நாளை தமிழ்நாட்டு மக்களுக்கு
இனப்படுகொலை இங்கே நடந்தாலும்
வேடிக்கைபார்த்திடுமோ வேதனைத்தான் தீர்ந்திடுமோ ...

மானமுள்ள தமிழர்களே விழித்தெழுங்கள்
மாண்டது தமிழின இரத்தங்களடா
மானமில்லா இலங்கைக்கும் இந்தியாவிற்கும்
மாபெரும் புத்தியினை புகட்டிடுவோமடா ..

எஞ்சியுள்ள தமிழீழ மக்களுக்கு
உரிய உரிமைகள் பெற்றிடவே
தமிழர்கள் அனைவரும் சூளுரைத்து
தமிழீழம் வாழ்ந்திடவே குரல்கொடுப்போம் ...

தமிழீழ மக்களுக்கு
குரல் கொடுத்திட திரண்டிடுவோம் ...

ந. தெய்வசிகாமணி

எழுதியவர் : ந. தெய்வசிகாமணி (30-Mar-14, 10:56 am)
பார்வை : 74

மேலே