காதல் சுகமானது

இப்போதும் கூட அப்படியேதானிருக்கிறது காதல்....! எதுவோ வேண்டுமென்ற ஆசைகளை எல்லாம் காலம் பக்குவக் கத்திகளை வைத்து வெட்டி எறிந்த பின்பும் இன்னமும் நம்மை இழுத்து பிடித்து வைத்துக் கொண்டிருப்பது எது என்று யோசித்துப் பார்க்கையில் இன்னும் அழுத்தமாய், ஆழமாய் காதல் என்றால் என்னவென்று புரிகிறது. எத்தனை எழுதினாலும் அழுத்துப்போகாத காதல் இருக்கும் போது வாழ்க்கை என்ன செய்து விடும் நம்மை...?
ஏகாந்தக் கனவுகளுக்கு என்ன பெயர் இடுவது? எதையும் எதிர்ப்பார்க்காத நேசத்தை எப்படி எழுதுவது? கடைசியாய் நாம் ஒன்றாய் அமர்ந்திருந்த அந்த மாலைக்குத்தான் எவ்வளவு பொறுமை இருந்திருக்க வேண்டும் தேன்மொழி...? எதுவுமே பேசிக்கொள்ளாத கனத்த நிமிடங்களைச் சுமந்து கொண்டு எப்படித்தான் நகர்ந்திருக்கும் அன்றைக்கு காலம்...? காதலியைப் பெறும் போது காதல் பரபரப்பான உற்சாகத்துக்கு நடுவே வலுவிழந்ததாய் போனாலும் காதலியை இழக்கும் தருணத்தில் அது ஒரு தாயாய் கட்டியணைத்து ஆசுவாசப்படுத்ததான் செய்கிறது. திருமணத்துக்காக காதலித்துக் கொள்ளும் சமூக நடைமுறையில் காதலிப்பதற்காக காதலிக்கச் சொல்லிக் கொடுத்த காதலோடு தான் நான் இன்னமும் வசித்துக் கொண்டிருக்கிறேன்....
தேன்மொழி தாலியை அடிக்கடி சரி செய்தபடி என்னோடு பேசிக் கொண்டிருந்தது பிரசாத்துக்கு கொஞ்சம் சங்கடமாயிருந்தது.
தாம்பத்தியத்திற்குள் காதல் தைரியமாய் எட்டிப்பார்க்கும்....இன்னும் சொல்லப் போனால் எல்லா உறவுகளுக்கும் நடுவே எழும் நேசங்களில் எல்லாம் சுதந்திரமாய் காதல் சுற்றிவரும். காதலைக் கட்டிப் போடவோ அல்லது விளக்கம் சொல்லி விதிவிலக்காக ஆக்கவோ முடியவே முடியாது. இந்த உலகின் மூலை முடுக்கெல்லாம் அது தடையின்றி திமிராய்ச் சுற்றிவரும். என் செத்துப் போன அப்பாத்தாவின் மீது இன்னமும் அது மையல் கொண்டிருக்கிறது. அவளின் வாஞ்சையான பேச்சையும், அனுசரனையான உடல் மொழியையும், நட்சத்திரமாய் ஜொலிக்கும் மூக்குத்தியையும், முழுதாய் நரைத்த தலையில் இடைஇடையே எட்டிப்பார்த்து சிரிக்கும் கருப்பு முடிகளையும்....அள்ளிக் கட்டிய கொண்டையையும், கண்டாங்கிச் சேலையையு, குலுங்க குலுங்கச் சிரிக்கும் போது மூடிக் கொள்ளும் சிறு கண்களையும், தன் கணவன் மீதிருந்த ப்ரியத்தை வலது கையில் பச்சையாய் குத்தியிருந்த அவளது காதலையும் .....
இன்னமும் விட்டு விலகவே இல்லை என் காதல் .
காதல் அப்படித்தான். அது ஒரு காட்டாறு, அது ஒரு புயல், அதுவே தென்றல். அது உருவாக்கும், அழிக்கும், ஆடும், பாடும் எல்லா வேடமும் இட்டுக் கொள்ளும் தன் சுயத்தை மாற்றிக் கொள்ளாமல். அதேபோல்தான் உன் தாம்பத்தியத்திற்குள்ளும் காதல் எட்டிப்பார்த்திருக்கும், உன் வாழ்க்கைத் துணையாய் அது வாழ்ந்து சிரித்துக் கொண்டுமிருக்கும்...ஆனால் காதலுக்குள் எதுவுமே நுழைந்து விட முடியாது. இந்த உலகில் சுற்றிச் சுற்றி நிகழும் எல்லாவற்றுக்கும் காதல் அவசியமாயிருக்கிறது. காதலின்றி எந்த நிகழ்வும் ரசிக்கத் தகுந்ததாய் இருக்க முடியாது ஆனால்....காதலுக்கு எதன் தேவையும், அவசியமும் கிடையவே கிடையாது....
எதன் பொருட்டோ நிகழ்ந்தால் அது காதலுமாகாது........!
பிரசாத் பேசிக் கொண்டிருந்தான். மீண்டும் தேன் மொழியைப் பார்ப்போம் என்று அவன் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
தேன் மொழி பிரசாத்தை நிமிர்ந்து பார்த்தாள்....
மூணு வருசம் ஆச்சுல்ல பிரசாத்... நாம கடைசியா பாத்து......எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல....உன்னோட என்னால பேசாமவும் இருக்க முடியலை, ஆனா பேசுறது தப்புன்னும் தோணுது...,
கோயில் பிரகாரத்தில் யாரும் இல்லாமல் இருந்தார்கள். பெரும்பாலும் பிரதோஷ தினத்தில் சிவன் கோயிலுக்கு வரும் கூட்டம் மற்ற நாட்களில் எட்டிப்பார்ப்பதே இல்லை. கபாலி யார்? ஏன் இங்கே கோயில் வந்தது...? எதற்கு கோயிலுக்கு வரவேண்டும்..? கோயிலில் என்ன கிடைக்கிறது? என்றெல்லாம் பார்த்து வருவதில்லை சனம்....
பிரதோஷ தினத்தில் நந்தியிடம் வேண்டுக்கோள் வைத்தால் வாழ்க்கையில் பணக்காரர்களாகி விடலாம் என்ற ஆசை. முட்டி முட்டி சாமி கும்பிடுகிறார்கள். அவசர அவசரமாய் ஓம்நமசிவாய சொல்கிறார்கள். சம்போ மகாதேவா என்கிறார்கள். உடலை பவ்யமாய் வைத்துக் கொள்கிறார்கள். தாழ்ந்த குரலில் பேசுகிறார்கள். பாவமாய் முகத்தை வைத்துக் கொள்கிறார்கள். சிவபுராணத்தை சப்தமாய் சொல்கிறார்கள். ஏனோ ஒரு வருத்தத்தை விரும்பியே வரவழைத்துக் கொண்டு சோகமாய் பிரகாரம் சுற்றி வருகிறார்கள். எல்லாம் முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது ஊர் வம்பு பேசுகிறார்கள். சாமி கும்பிடுவதை ஒழுக்கமாய் நினைத்துக் கொள்கிறார்கள்....அப்படி கும்பிடாவிட்டால் ஒரு குற்ற உணர்சி வந்துவிடுகிறது இவர்களுக்கு. இந்தக் குற்ற உணர்ச்சி மதமாச்சர்யம் பார்க்காமல் எல்லா மதத்தில் இருப்பவர்களுக்கும் வந்து விடுகிறது. அப்படி வரவைத்ததுதான் மதவாதிகளின் வெற்றியும் கூட....
ஆன்மீகம் என்பது தேடல் என்பது விளங்காதவரை வாழ்க்கை என்பது என்ன என்று யாருக்கும் விளங்கப் போவதில்லை. வாழ்க்கை விளங்காத போது காதல் என்னவென்று எப்படி விளங்கும்? காதல் என்னவென்று விளங்காமல் போனதால் ஏற்பட்ட அபத்தம்தான் இன்றைக்கு பூமியை பிடித்திருக்கும் மிகப்பெரிய பிணி. காதல் காதல் என்று உச்சரித்தால் எல்லோருடைய காதிலும் காமம், காமம் என்றுதான் பெரும்பாலும் விழுகிறது.
தேனுவை நிமிர்ந்து பார்த்தான் பிரசாத்.
நாம் சந்தித்தது தற்செயலானதுதான் தேனு...! எனக்குள்ள என்ன இருக்குன்னு நான் உன்கிட்ட சொன்னேன். உணர்வோடு பேசினதால கொஞ்சம் உரைநடையாவே சொல்லிட்டேன்...
உன்னை காதலிச்சது உண்மை. இப்போ காதலிக்கிறதும் உண்மை. காதலை நான் திருமணத்தோட தொடர்புபடுத்திப் பார்த்தது கிடையாது. பார்க்கப்போறதும் கிடையாது. நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி காதலிக்க காதல் மட்டும் போதும். எனக்கு உன்னைப் பிடிக்கும்... நாம காதலிச்சோம் ஆனா திருமணம் செஞ்சுக்கல, செஞ்சுக்குற சூழல் அமையலை...அதுக்காக உன்னை நினைச்சு ஏங்கி நான் வேறு திருமணம் செய்யாம இருக்கப் போறதும் கிடையாது. திருமணங்கறது சமூகத் தேவை. வாழ்கைச் சுழற்சியின் நிர்ப்பந்தம். அந்த நிர்ப்பந்தம் இல்லாம போற வாழ்க்கை அமைப்பு எனக்கு இல்ல...அதனால அதை விட்டு நான் விலகவும் முடியாது. அதே நேரத்துல நீ, உன் மீதிருந்த காதல் அது எல்லாம் இல்லவே இல்லன்னு மறைச்சுக்கிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரியும் வாழ முடியாது....
உனக்கு ஒரு பாதை...எனக்கு ஒரு பாதை....
என் காதல் என் நினைவுகள். உன் காதல் உன் நினைவுகள். என்கிட்ட பேச குற்ற உணர்ச்சி வர்றதுக்கு காரணம் காதலை இன்னமும் எதிர்ப்பார்ப்புக்குள்ளயே நீ வச்சிட்டு இருக்கறதுதான்....
எதிர்பாராம உன்னை நான் சந்திச்சேன். காதல் வயப்பட்டோம். சூழல் நம்மள வேறு, வேறு திசைக்கு விரட்டிச்சு, இப்போ ஏதிர்பாராம மறுபடி கோயில்ல சந்திச்சேன். நாம சந்தோஷமாவே மறுபடி நம்ம திசையில நடக்கப் போறோம்..அவ்ளோதான்...!
இன்னும் சொல்லப்போனால்...நீ குற்ற உணர்ச்சியோட என்னை சந்திக்கிறதும், பேசுறதும் இனிமே அமையவேக் கூடாதுன்னும் தோணுது....
கோயிலுக்கு ஏதேதோ எண்ணங்களோட மனுசங்க வர்ற மாதிரி வாழ்க்கைக்குள்ளயும் வந்துடுறாங்க தேனு....! இங்க திருமணம், தாம்பத்யம், கொடுக்கல், வாங்கல், காசு, பணம், சொத்து, பிள்ளைங்க, படிப்பு, கடமைகள் தாண்டி இன்னமும் நிறைய இருக்கு....
பிரசாத் சிரித்தான்.
எப்பவும் போல நீ இப்பவும் நீயே பேசி முடிச்சுட்ட பிரசாத். என்னைச் சுற்றி இருக்குற உலகம் நீ சொன்னதை விளங்கிக்காது....ஆனா உன்னை எனக்குத் தெரியும். எல்லாத்துக்கும் மேல உன்னை ரொம்பப் பிடிக்கும்....
என்றாவது ஒரு நாள்...
நான் இறந்த செய்தி கேள்விப்பட்டால்...
என் கல்லறையில் வந்து
செடி ஒன்றை நட்டு வைத்து விட்டுப் போ...
என் ப்ரியக் காதலனே...!
சொல்லிவிட்டு கண்ணீரை துடைத்துக் கொண்டள் தேன்மொழி...கிளம்பலாம்...ப்ரசாத்.......என்றாள்.
எப்போதும் போல இனிமேலும்
உனக்கான கவிதை வரிகளை
நான் காதல் என்ற பெயரில்
கிறுக்கிக் கொண்டுதான் இருப்பேன்...
என் வார்த்தைகளுக்குள் ஊன்றி நிற்கும்
மெளன மரத்தின் கிளைகளில்
கூவிக் கொண்டிருக்கும் குயில்கள்
எல்லாம் உனக்கான பாடலைத்தான்
பாடிக் கொண்டிருக்கும்....
நீ கிளம்பு தேன்மொழி...நான் கொஞ்ச நேரம் ஆகும் கிளம்ப...சிரித்தபடியே சொன்னான் பிரசாத்.
தேன்மொழி போய் வெகுநேரம் ஆகியும் கோயில் வாசலைப் பார்த்தபடி இருந்த பிரசாத் சம்மணமிட்டு அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்.
இனிமேல் தேனை சந்திக்க வைத்து விடாதே காலமே.......
யோசித்தபடியே தன்னுள் காணாமல் போயிருந்தான்...!
தேவா சுப்பையா...