அழுகையொன்றும் ஆயுதமல்ல

எங்கள் வாசல்கள் ஏறி பகைவன் வந்தான்
எத்திசையும் கிழக்காய் எமக்கு இருந்ததில்லை

விடுதலைப்பாடல் வீதி உலா வந்த தெருக்கள்
விம்மி விம்மி வீழ்ந்து அழுதது

வரித்தலைவனின் விரல் நீழும் பக்கம்
பகையழிந்த சேதி கேட்டும்
பகையழித்து நீதி கேட்டும்
நிமிர்ந்த மண்ணின் காற்று மூச்சற்றுப்போகிறது.

விடியலில் கூவிய குயில்கள்
குரலிழந்து குருதியில் குளித்தன.
வானம் விழிதிறந்த போதெல்லாம்
நிலம் உழுத மரணம்
நெய்தல் வரை நீணடது.

அடங்காத புலிக்கும் அஞ்சுகின்ற அரிக்கும்
வெடித்த்து ஒரு எரிமலை யுத்தம்.
காயம் படர்ந்த கணம் எங்கும்
நரம்போடியது துயரம்.

முள்ளி வாய்க்கால்
நிமிர்ந்த வாழ்வுக்கான
சாத்தியத்தின் கிளை.

போர் மேகம் வேர் பிடித்து
சுடலை வெடிலடித்து
தாகம் தீர சாவருந்திய
கொடும் தவமிருந்த மண்ணடா.

கோண மலை தொட்டு
பொடியேற்றும் நாள் வரைக்கும்
வீழானே தமிழன் என
சூழுரைத்து எழுக

திட்டமிட்ட துட்டகைமுனு
கொட்டியாவை அழித்தவனாம்
கொழும்பில் நின்று சத்தமிட்டு
எழுந்து எழுந்து சிரித்தவனாம்

எல்லாளன் பெயர் சொல்லி களம் புகுந்த
தமிழ்ச்சேனை ஓயாது களமாடும்
ஒரு நாளில் சிங்களத்தின் தலை வீழும்.

மே 18 தமிழ்ச்சாதி உயிர் விட்டு
இலட்சியத்தைக்கைவிட்டு
ஊர் விட்டு நாடு விட்டு
தூர ஓடி விடுவாரென
தலதாமாளிகை கண்டது கனவு.

மனித உரிமைகளின் வாய்களுக்கு
பிளாஸ்ரர் அடித்து
பிரசாதம் வழங்கியது
இனவழிப்பு.

கடலேறி வந்து எம்மை கரைகளில்
வீழ்த்தி வீழ்த்தி விட்டான்
இழப்பதற்கு இனி எதுவுமில்லை
இனி என்ன செய்யப் போகிறோம்

ஜெயசிக்குறு வென்றோம்
ஓயாத அலை கொண்டோம்
தீச்சுவாலை தின்றோம்
எல்லாளனாய் மகிழ்ந்தோம்
எல்லாம் கடந்த காலம் ஆகியது
எதிர்காலம் என்ன என்கிற
வாசலில் குந்தியிருக்கிறது.

அய்ந்து ஆண்டுகள் அகலப் பறந்தும்
அய்யோ வென அழுது என்ன பயன்
சாவதை சாவென எண்ணாமல்
விடுதலை வேரெனக் கொள்

முள்ளிவாய்க்காலை சோகமென சொல்பவனை
சொறி சிரங்கென தள்ளி வை

உயிர் இழந்தும் தர்மம் துடித்த
நிலமடா அது

சொந்த நாடின்றி ஒரு சுதந்திரம்
வருமாயின் தமிழன் எல்லாம்
சாகக் கடவது

வேலிக்காய் சண்டை போடும் வேலையை விட்டு
தோல்வியில் நின்று வெற்றிக்காய் உழை

என்ன செய்யப் போகிறாய்
செம்மணிகள் புதிதாய் முளைக்கிறது
நீ முள்ளிவாய்க்கால் அழுகையில்
மூழ்கிவிட

என்ன செய்யப் போகிறாய்
கிரிசாந்தினிகள் அதிகரிக்கப் போகிறார்கள்
நீ பிரமையில் திளைத்து நிற்க

என்ன செய்யப் போகிறாய்
உன்னையும் நாடு கடத்த சொல்லப் போகிறார்

இதுவரையும் இழந்த நாட்களை
எப்பொழுது வெற்றியாக்க போகிறாய்

தமிழா
முள்ளிவாய்க்கால் ஒன்றும் முதுகெலும்புடைந்த
காயத்தின் நிலமில்லை

அங்கு தான் அங்கு தான்
தமிழனின் பிரளயம் தோன்றியது

அங்கு தான் அங்கு தான்
வீரத்தின் தொன்மம் தொடரானது

அங்கு தான் அங்கு தான்
எல்லாம் தொடக்கமானது

எதிரிக்கு சாவும்
உனக்கு வாழ்வும்

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (17-May-14, 3:14 pm)
பார்வை : 73

மேலே