அதையும் தாண்டியது

அதையும் தாண்டியது
======================

சாதகமாக்கிக்கொள்ளாத
என் அன்பின் ஆளுமையில்
இனிமேலும் அகப்பட்டிருக்கவேண்டாம்
அறியாமல் பறந்துவிடு
வெப்பச்சிதைவின் நிகழ்வொன்றில்
என் வெதுப்பகத்தில்
கனன்றுக்கொண்டிருக்கும்
செல்லரித்த பதியல்களின்மேல்
நீரூற்றி அணைத்துவிட்டேன்....

அடுப்பங்கரிகளாய்
மண்டிக்கிடக்கும் கூளங்களை
தூர்வாரி எடுத்து
உன் சந்தோஷ இறகுகள்
தழுவிச்செல்லும்
மனப்பூஞ்சோலைவேர்களுக்கு
உரமாகட்டும் என வீசிவிடு........
புதிதாய் திறக்கக்காத்திருக்கும்
உன் இதயக் காலதரின்
கண்ணாடிச்சட்டங்களின் வழியே
ஊடுருவிக் கொண்டிருக்கும்
புதிய பரிதிகள்
இனி உன் விடியல்களை இதமாக்கிடட்டும்....

என் அடர் புருவங்களில்
அதுவரையிலும் தங்கிவிட்டு
சற்றுமுன் இறங்கிப்போன தலைக்கனத்தில்
யாருக்குமான சிறையுமில்லை என்பதை
இனியேனும் உணர்ந்துவிடு .....

இவற்றையெல்லாம் தந்துசென்ற காரணங்களை
எதற்கென்று ஆராயும் சந்தர்பங்களில்
நீ அறியாமல் கடக்கின்ற
முட்பாதைகளின் மேலே
சன்னமாக பதியமிடும் உன் பூப்பாதங்களை
வலிக்காமல் சுமக்கின்ற
படர்ந்த புல்வெளியாக வீற்றிருப்பேன் நான்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (11-Jul-14, 5:45 am)
பார்வை : 107

மேலே