கற்றவை பற்றவை போட்டி கவிதை

கற்றவைகள் உன்னை
காதல் செய்யும்
காலம் பூராவும்
தேடச் சொல்லும்

பற்றவை பாவங்கள்
கொல்ல பற்றவை
கொற்றவை கோபம்
கண்களில் கொண்டுவை
களைகளைப் பறித்து
தடைகளை உடை

விதிகளை மீறிய
விபரீத சிம்மாசனத்தில்
நீதிச் செங்கோல்கள்
நியாயங்களைத் தகர்க்கும்

பகல் சூரியனே
உன் பார்வையில்
படரட்டும் தீ

கற்றவைகள் கொண்டு
அது இல்லாருக்கு
சுடர் பற்றவை
விட்டவைகள் எட்டிப்பறிக்க
வித்தொன்றை போட்டுவை

மெட்டுகளும் மொட்டுகளாகும்
மொட்டுகள் மெட்டுகளாகும்
மலர வைப்பதும்
மயங்க வைப்பதும்
உன்கை வீணையாலே.

கற்றவைகள் துணையில்
கசடுகள் பற்றவை
மற்றவைகள் விட்டுவை.

எழுதியவர் : சுசீந்திரன் . (13-Jul-14, 7:26 am)
பார்வை : 91

மேலே