தெய்வத்துக்குப் படையல்

அப்பா
ஒரு மொடாக் குடிகாரர்
தினம் தினம்
சாராயமோ கள்ளோ
மதுக்கஷாயம் எனும் விஷம் கலந்த கன்றாவியோ
நள்ளிரவில்
தள்ளாடித் தள்ளாடி வரும்
அப்பாவுக்கு சுடுசாதம் போட
எத்தனிக்கும் என் அம்மாவின்
பரிதவிப்பை பாசம் என்பதோ, பயம் என்பதோ?

அப்போதும் தொட்டுக் கொள்ள
உணக்கையாயில்லை
என அடித்து உதைத்து
என்னையும்
என் ஒன்றரை வயது தம்பியையும் மிரளச் செய்து
சிதறடிப்பார் அப்பா

என்னை பக்கத்து வீட்டு
மீசை மாமா மாரியப்பனும்
தம்பியை எதிர் வீட்டு அரிசிக் கார அம்மாவும்
தஞ்சம் தந்து ஆதரிப்பார்கள்
அம்மா
கிணற்றடி தண்ணீர் தொட்டிக்குப் பின்னால்
ஒளிந்து இரவைக் கடப்பாள்...

தீபாவளி பொங்கல் நாட்களில்
விடிந்ததும் காணாமல் போகும் அப்பா
மறுநாள் பாதி சாமத்தில் வருவார்

தெருக் குழந்தைகள்
கொண்டாட்டத்தை ஏக்கமாய்
பார்த்து உறங்கி விடுவான் தம்பி
எனக்குள்ளான மௌனத்தை
எப்போதும் போல் மென்று விழுங்கியபடி
மூலையில் அமர்ந்திருப்பேன்

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் சமயம்
பெரியாஸ்பத்திரியில் அப்பாவை சேர்த்தார்கள்
அப்பாவின் ஈரல், குடல், நுரையீரல் எல்லாம்
போய் விட்டாதாக
என் சித்தப்பாவும் பெரியத்தானும்
பேசிக் கொண்டார்கள்

ஓர் அதிகாலைப் பொழுதில்
பெரிய அத்தானும்
என் சித்தப்பா சின்னம்மா
கட்டிக் கொண்டு அழுதார்கள்
என் அப்பா செத்து விட்டாரென்று...

வாழ்ந்த கொஞ்ச நாளிலும்
அப்பாவை வில்லனாகவேப் பார்த்து வந்ததால்
அழுகையே வராது
நானும் தம்பியும்
உற்றாரின் ஒப்பாரிகளை
திரு..திரு.வென பார்த்தபடி
அந்த நாளைக் கடந்தோம்

ஆண்டுகள் பல கடந்தும்
இட்லியைக் கூட
அப்பாவின் படத்தின் முன்பாக
படையல் போட்டு நீர் விளாவி
திருநீறு பூசிய பின்னரே
எங்களைப் பசியாற்றுவாள் அம்மா...

எவனோ ஒரு சாமியாடி சொன்னானாம்
அப்பா இந்த வீட்டில்
தெய்வமாய் இருக்கிறார் என்று.

எழுதியவர் : பா.குணசேகரன் (18-Jul-14, 1:56 pm)
சேர்த்தது : பா குணசேகரன்
பார்வை : 95

மேலே