அழகான வாழ்க்கை ஆனந்தமாய் - போட்டிக் கவிதை - இராஜ்குமார்

ஆடிவர குழந்தையை ஓடி ஓடி தூக்கணும்
நாடிவர உறவுகளை ஆடி பாட வைக்கணும்
தேடிவந்த தோழனும் கவலைமறந்து சிரிக்கணும்
மோதவந்த வில்லனும் அன்பில்நனைந்து வாழணும்

அஞ்சி அஞ்சி அப்பாவை நிறையவே கேக்கணும்
மிஞ்சி மிஞ்சி அன்னையை அதிகமா அணைக்கணும்
கொஞ்சி கொஞ்சி தங்கையை கொஞ்சமா திட்டணும்
சாஞ்சி சாஞ்சி மாமன் பொண்ணையே பாக்கணும்

தனிமை அழைக்க இனிமையெனும் உலகமாகணும்
கவிதை படைக்க காதலெனும் பாடலாகணும்
அன்பை கொடுக்க மகிழ்ச்சியெனும் தேனாகணும்
வாழ்க்கை துரத்த திறமையெனும் தேடலாகணும்

வயலில் நானும் கால் பதித்து நகர
பசுமை ஒன்றே பார்வையில் படணும்
எங்கும் காணும் சாதி மறந்துப் போக
வறுமை ஒழிந்து செழுமை காணணும்

அனுபவம் சொல்லும் அனைத்தும் படித்து
தேன்சொட்டும் இசையினுள்ளே மூழ்கிப் போகணும்
உலகம் காட்டும் ஊடகம் பார்த்து
விந்தைவழியும் கலையில் அசந்துப் போகணும்

உள்ளம் உடைந்து வீழும் நிலையில்கூட
சிந்தனை ஒன்றே சிறப்பாய் தோன்றணும்
உயிரை பறிக்கும் இறுதி நொடியில்கூட
அழகுரசனை ஒன்றே வசந்த வாழ்க்கையாகணும்

மலடெனும் வார்த்தை மறைந்துத் திரியாகி
அனாதை பலரால் அன்னையெனும் சுடராகணும்
வேசியெனும் பட்டம் பறந்து உயிராகி
ஆண்கள் சிலரால் மனைவியெனும் மலராகணும்

அச்சம் விடுத்து நம்பிக்கை வளர்ந்து உயர
இளையசமூகம் வல்லரசை வாங்கி தரணும்
உச்சம் மிதித்து வெற்றியை பறித்து வரவே
அயல்நாட்டிற்கும் அன்பைநாமே கடனாய் தரணும்

மனதை மதித்து பணத்தை எறிந்து - சிறு
குழந்தை சிரிப்பில் புதைந்துப் போகணும்
சினத்தை குறைத்து அறிவை வளர்த்து - இந்த
இயற்கை அழகில் சிலிர்த்துப் போகணும்

ஊருகின்ற ரத்தம் பல உடலில் ஓடணும்
நாமிறந்தும் விழியினி புவி காணணும்
உடலுறுப்பு எரியாமலினி உயிர் வாழணும்
அன்பால் மனிதம் இனிவாடா மலராகணும் ..!!

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (24-Aug-14, 1:08 pm)
பார்வை : 174

மேலே