மருதாணி

என் ப்ரியசகி
உன் பவித்ர விரல்கள்
சூடிக்கொள்வதற்காக
எளிதாக எவருமடையமுடியா
ஆதிக் காதலினொரு
பாதாளவறையான
என்இதயத்திற்குள்
கால் நூற்றாண்டுகளுக்கு
மேலாக -
பூத்துக் கிடக்கிறது
எவரும் சூடா
மருதாணியொன்று !

சிறகுகளில் ஓராயிரம்
கால்களுள்ள
செந்நிறக் குருதிப்பறவையின்
சிவப்புகளிலது
பதியமிடப்பட்டுள்ளது !

பிரியங்களினதி பயங்கரம்
மையங்கொண்டுள்ளனதன்
சிறுநீள் சிற்றிலைகள்
பல வண்ணப் பட்டாம்பூச்சிகளின்
நிறக்கலவைகளை
கரைத்து வைத்துள்ளதுன்
விரல் சிவக்க !

கனவுகளின் கண்களைக்
கடன் வாங்கி
காதலின் உயிர் சொட்டில்
ஒளிச் சேர்க்கைசெய்து
தேவப் பச்சையத்தில்
தக தகத்து -
நின் பொன்விரல் தீண்டும்
புண்ணியத்திற்காக
ஒற்றைக் கிளைத்
தவமிருக்குமதை!

சூடிக் கொடுத்த
சுடர்க் கொடியே
நீ
சூடிக்கொள்ளப் போவதெப்போது ?

எழுதியவர் : பாலா (12-Oct-14, 8:14 pm)
பார்வை : 902

மேலே