எங்கள் தங்கராஜா
"எங்கள் பள்ளிகளில், உங்கள் குழந்தைகளை அனுமதியுங்கள்...!!"
பள்ளி விளம்பரங்கள் பெற்றோரிடமும், பிரம்மச்சாரிகளிடமும் பாரபட்சமின்றி வீதியெல்லாம் கெஞ்சிக்கொண்டிருந்தன.
"பண்டிகையப்ப, ஊருப்பட்ட விலை சொல்லுவாங்க, இப்பவே சுண்டல், பொறி, பூ எல்லாம் வாங்கிடலாம் புள்ள...!!"
தீவிர திட்டம் தீட்டின நடுத்தர குடும்பங்கள்.
"ஒரு சல்லை, 40 ரூவா. 2 மொழம் பூ 50 ரூவா. ஒரு பக்கா பொறி 30 ரூவா...!!"
வாகன இரைச்சலையும், ச்சோவென கொட்டிய மழையையும் தாண்டி மக்களை ஈர்த்தது வியாபாரிகளின் குரல்.
"வண்டிய கழுவி பூஜை போடனும், ஊருப்பட்ட வேலை இருக்கு, சீக்கிரம் பூஜை பொருள கட்டுப்பா...!!"
லட்சுமி, சரஸ்வதி தெய்வங்களோடு சேர்ந்து, வாழ்வோடு ஒன்றிப்போன ஆயுதங்களும் உயிர் பெற தயாராகிக்கொண்டிருந்தன.
விடிந்தால் தசமி விஜயம்,
விழாக்கோலம் பூண்டிருந்தது கோவை நகரம்!
ஆனால்! எங்கள் குடும்பத்தில் மட்டும்,
அந்தப்பண்டிகை விடியல்... இருளாகவே நிலைத்து விட்டது!
எங்கள் குடும்பத்தாருக்கு, எல்லா வெளிச்சமும் கருப்பாகவே தோன்றியது,
தினம் உதிக்கும் சூரியன் கூட, எங்களிடம் தோற்றோடிக்கொண்டிருந்தான்!
மழை, வானத்தில் மட்டுமல்ல, எங்கள் கண்களிலும் பெய்தது,
வெளியில் மட்டுமல்ல, வீட்டினுள்ளும் கொட்டியது!
ஆம்! என் அன்பு மாமா உறங்கிக்கொண்டிருந்தார்... நிரந்தரமாக!
என் குழந்தை பருவத்தை தோளில் சுமந்தவரில் ஒருவரை,
ரத்த சொந்தம் இல்லை என்றாலும், என் அத்தை சொந்தத்தை பூரனமாக்கியவரை,
என் அரும்பு குரும்பை, தள்ளி நின்று ரசித்தவரை,
என் குழந்தை காலத்தை நினைவு படுத்தி சிலாகித்தவரை,
என் மகனின் நடையை விரல் பிடித்து இன்புற்றவரை,
அரசியலுடன் ஆன்மீகமும், பகுத்தறிவுடன் தேசப்பற்றும், ஊக்குவிக்கும் குணமும் கொண்டவரை,
சாதனை வெறியும், அதிசய தைரியமும் மேலோங்கி நின்றவரை,
என் நகைக்கு, சுவை கூட்டியவரை,
எனக்கு நித்திரையின் ரகசியத்தை போதித்த யோகா குருவை,
என் உயிர் நண்பனை எனக்கு வரமளித்தவரை...
...மார்பில் குத்தினேன்!
ஆம்! என்னால் இயன்றவரை குத்தினேன்,
வலிக்குமோ?
ஒரு வினாடி கூட சிந்திக்காமல்,
இரக்கமற்று கைகளால் குத்தினேன்!
எங்கள் நாட்டில், பிரசவம் பார்க்கும் மருத்துவச்சி சாலைகள்,
நிஜ மருத்துவர்கள் கைவிட்ட பிறகும்,
என்னுடன் இணைந்து, என் மாமன் இதயம் மறுபடி துடிக்கச்செய்து விடாதா என்ற பேராசையில்,
நாங்கள் பயணித்த அவசர ஊர்தியின் வேகத்தில்,
கண்ணீருடன் கதறிக்கொண்டே,
தங்கராஜ்
மீண்டும் , மீண்டும் குத்தினேன்!
எதுவும் உரைக்கவில்லை அவருக்கு,
எந்த சலனமும் இல்லை அவரிடம்,
ஒரு பலனும் இல்லை இறுதியில்!
அவரின் மெய், பொய்யாய் போய் இருந்தது,
ம்ம்ம்!! பாவம் வாழ்க்கை அவருக்கு தந்த மரண அடி,
என்னுடைய உயிர் அடியை விட பலமானது போலும்,
அவரின் ஆத்மா, ஓரம் நின்று என் அறியாமையை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது!
ஆம்! உறங்கித்தான் போய் விட்டார் நிரந்தரமாக,
உறுதி வேறு செய்தார்கள் அனைவரும்!
இல்லை, என்னால் நம்ப இயலவில்லை!
எங்களில் அவர் நினைவுகள் இல்லையா?
அவர் வித்துக்களில், உயிர் இல்லையா?
அவர் உருவம் மறந்து விடுமா?
இல்லை பாசம் தான் மரத்து விடுமா?
உடல் துறந்த அவர் ஆத்மா உயிர்த்திருக்கும்,
உயிர்த்திருக்கும் அந்த ஆத்மா, மறுபடி உருவெடுக்கும்!
அந்த நாள் வெகு தூரம் இல்லை, இன்னும் எட்டு மாதங்களே!
ராஜனோ, ராணியோ... இவ்வுலகில் பிறப்பெடுக்கும்,
அது தங்கராஜனின் மரபை கொண்டிருக்கும்,
அன்று அனைவருக்கும் அது உண்மை உணர்த்தி இருக்கும்,
நீங்கள் உயிருடன்தான் இருக்கிறீர் என்று!
அதுவே இந்த நீடித்த இரவை தோற்கடிக்கும்,
விடியலை நிரந்தரமாக்கும்!
இனி இருளும் தோற்றோடும்,
உங்கள் மரபு செழித்தோங்கும்!
அது கண்டு உங்கள் ஆன்மா மகிழ்வுணர்வில் குளித்து,
பெருமிதத்தில் திளைத்து,
சாந்தி அடையட்டும்!