“ அறிவு படிப்பென்று பள்ளி வை ”

படைத்தவன் அளித்த பரிசது செறிவு
பகுத்தறிவென்றோர் பெறுமதி அறிவு
மனிதனாய் ஆனாய் என்பதை அறியா
மண்ணதில் வீணாய் போவது சரியா?
படித்தரம் உள்ள வெகுமதி தெரிவு நீ
பாரினில் அறிவு உயர்வென கருதினி

தேர்வுகள் வந்தால் எழுதிட வினை
திறமைக்கு அறிவு இருக்குது துணை
தேடலை நன்று திறம்பட சொல்லு
திறனது கொண்டு எழுந்து நீ நில்லு
நெருக்கடி நேர்ந்திட நிமிர்த்திடும் ஏணி
நீந்தி நீ சேர்ந்திட அறிவது தோணி


​அறிவது சேர்ந்தால் உனக்கது கைவாள்
ஆற்றலில் தேர்ந்தால்​உயர்ந்த ​ ​நீ ​மெய்யாள்
எ​திரிக்கும் வாய்​ப்​பை அறிவினால் கொடுத்து
ஏழ்மையின் வாழ்வை ஏற்றத்தில் நிறுத்து
அறிவதை கொண்டு வாழ்வதை துலக்கு
ஆழுமை வென்று பூமியை பெருக்கு


அறிவை கூட்டு ஆணவம் கழிபடும்
அறிவை தீட்டு பாறையும் வழிவிடும்
அறிவது சமுத்திரம் பரந்ததோர் ஆழி
அறிந்திடு சரித்திரம் படிப்பதால் தேடி
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு-இதை
தெரிந்தபின் உண்டா உனக்கொரு கேடு?


பொறுமையை கொஞ்சம் மனதினில் அள்ளி வை
பொய்,புறம் நஞ்சு எரித்திட கொள்ளி வை
கர்வத்தை மெல்ல கடைசியில் தள்ளி வை
கருணையை வெல்ல ஆளில்லை சொல்லி வை
அடுத்ததோர் இலக்கு அறிந்திட புள்ளி வை
அறிவென்ற கணக்கு படிப்பென்று பள்ளி வை.



ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (2-Jan-15, 9:57 pm)
பார்வை : 104

மேலே