என்னே ஒரு இன்பம்

இன்னொருவன் போல் இருக்க..
குடித்துப் பார்த்தான்..
எதிரில் இருவர்
தெரிவது போல் இருக்க
என்னே ஒரு இன்பமிது..
என்று தினம்
குடித்தான்..

தன் நிலை மறப்பதற்கும்
தன் வலி மறைப்பதற்கும்..
சிறு வெற்றி பெற்றதற்கும்
பல தோல்வி பார்த்ததற்கும்
பயம் கண்டு நடுங்கி
கை நடுங்கும் வரையில்
குடித்தான்..

வானில் பறப்பான் சில நேரம்..
தெருவில்..
விழுந்து கிடப்பான் பல நேரம்..
வேடிக்கை வாழ்வு என்றே
ஆசைதீர குடித்தான்..
வேடிக்கைப் பொருளானான்..
வேண்டுமட்டும்
குடித்தான்..

சுற்றமும் நட்பும்
சுட்டாலும் செத்தாலும்
காரணம் காட்டி ..
காட்டியே
குடித்தான்..

குடி
நிரந்தரமாய் அவனிடம்
குடி கொண்டது..
அவன்
குடி அழித்தது..
பின்னொரு நாள்
அவன் உயிரையும்
குடித்தது..

அடுத்த முறை
அவன் பிறக்கும் போது
குடி கூட
இலவசம் ஆகியிருக்கும்..
அப்போதும் குடிப்பான்
முழுமையாய் குடித்து
முடிக்கவில்லையே இன்னும்
என்று ஏக்கத்தோடு
இறந்த அம்மனிதன் !

எழுதியவர் : கருணா (27-Feb-15, 3:12 pm)
Tanglish : enne oru inbam
பார்வை : 800

மேலே