பிறிதொன்றும் பிறழாத -கார்த்திகா

இதழோடு இதழ் இறுக மொட்டு கட்டி அதிகாலையில் அவிழும் சின்னப் பூக்கள் மடியேந்துகின்றன என்னை..சில நொடிகள் பூக்களில் சூல் கொள்கிறேன்........


மூடிய இமைகளை முத்தமிட்டு தொடங்கும் கனாக்களை கொஞ்சம் வாசிக்கிறேன்....உறக்கம் தழுவ மறுக்கும் ஊமை நொடிகளில் கனவுகள் கொண்டே யாசித்து தீர்கிறேன்...


ராகங்கள் செவிகளை நிறைக்கும் போது நான் வெகுதூரம் பயணித்துவிடுகிறேன் வெற்று வளியில் உயிர் துழாவியபடி ..........


வானம்பாடியும் நானும் ஒரு வைகறையில் சந்தித்தோம் ..விடியலுக்கு குரல் தந்தது அது..கோடி விண்மீன்களை அள்ளி வான் தட்டில் வைத்த போது ஒரு சூரியனுக்கு பிறப்பு தந்தேன் நான் ...


பார்க்கும் நிறங்களை எல்லாம் திரட்டி மின்னல் நூலில் நிலாக்கள் கோர்த்தபோது வானவில் அள்ளிச் சென்றது...


எங்கோ ஒரு மரத்தின் இலை கீழே விழும்போது அதன் அழுகுரல் என் காதுகளை மட்டும் கிழிக்கிறது..


பசி மரத்து நெஞ்சுக் கூட்டில் காற்றடைத்த என் சக மனிதனின் வேள்வியில் வெந்தணலாகிறேன் ...


பால் இல்லா முலைக் காம்புகளை தடவும் பச்சிளம் சிசுவின் பசி தோற்கடிக்கிறது என்னை ....


சிவப்பினை உணரும் போதெல்லாம் என்னவள் ஒருத்தி சிதைக்கப்பட்ட இரத்த வாடை என் செல்களை அறுக்கிறது...


இழி சொற்களையெல்லாம் கடைந்து உப்புக் காற்றில் தேய்த்தெடுத்து அதன் ஊறல்களில் தடவல்களின்
எரிச்சல்களை சமன் செய்து விடலாம்...


விரியாத கருவறைகள் உடைந்து சிதறும்போது சிந்திய துளிகளில் நான் மரித்து
நாம் கூர் தீட்டுகிறோம்...


நீட்டிய கரங்களை விலங்கிடாமல் சிறை செய்யும் விரல்களில் நான் தொலைகிறேன்...


பிறிதொன்றும் பிறழாத விழி நரம்புகளில் சுயத்தைத் தேக்கி வைத்து சொட்டு சொட்டாய் உயிர் கொடுக்கிறேன் எல்லை கோடுகளில் அழிந்து கொண்டே ..

எழுதியவர் : கார்த்திகா AK (8-Mar-15, 6:40 am)
பார்வை : 179

சிறந்த கட்டுரைகள்

மேலே