திசையற்றவனின் தனிமை
தெரியும்
தெரியாதென்ற
தெளிவில்லா
பொழுதொன்றில்
நிலவில்லா வானம் போல்
தனித்தேக் கிடக்கிறோம்
நானும் என்
தனிமையும்...
சுமந்து நிற்கும்
பொழுதுகளில்
சுகமாகவே இருக்கிறதென்
தனிமை
நினைவு சுமந்து
கர்ப்பமாகி
கலங்கி நிற்கையில்
உணர்கிறேனென்
முதுமையை.
கனவு கலைந்து
கர்ப்பம் கலைத்து
கலங்கி நிற்கையில்
உணர்கிறேனென்
வெறுமையை.
எனக்கென நானிருக்கும்
எல்லாப் பொழுதிலும்
என்னை நீங்கி
என்னைச் சேர்வது போல்
உனக்காய் நானிருக்கும்
உண்மைப் பொழுதுகளில்
உன்னுருத் தின்றுவிட்டு
ஊமையாய் நிற்கிறத்தென்
தனிமை...
நீ
வரும் திசைநோக்கி
விழி வைத்து
வாடி நிற்கையில்
சட்டென விழுங்கி விடுகிறது
திசைகளை...
மழையென
மனம் நிரப்பி
மனிதனாகி நிற்கையில்
கடந்து நிற்கிறது
காலங்களை...
கலந்திருந்த பொழுதுகளில்
காலமெனக் கரைந்து
காத்திருந்த பொழுதுகளில்
கணங்களென நீள்கிறதென்
தனிமை..
விஷேசமான
தனித்துவமான
துல்லியமான
எளிமையான
சமரசங்களற்ற
தீவிரமான
ஆத்மார்த்தமான
அன்பைப் போல
தனிமையாய்
திசையற்ற நானும்
நிறமற்ற தனிமையும்...