எழுதுங்கள்
எப்படி எழுத வேண்டும் என்று
நான் கூறவில்லை
உங்கள் வரிகளில்
எந்த விபரீதமும் நிகழ்வதில்லை
வெற்று வெளிகளில்
உலவும் மோனப் புத்தர்கள்
உலகம் எக்கேடாவது போகட்டும்
காலத்தின் இழுவையில் ரீங்கரிக்கின்றேன்
எனப் பார்வையின் விளிம்பில் இருக்கிறார்கள்
உலகப் பாறாங்கல்லில் நசுங்கியவன் முனகலின்
தொலை தூர எதிரொலிகூடக் கேட்கவில்லை
வார்த்தைகளின் சப்தங்கள்
அதற்குள்ளேயே மடிந்துவிடுகின்றன
எழுதுங்கள்
பேனா முனையின் உரசலாவது கேட்கட்டும்
-ஆத்மாநாம்-