அவள் மட்டும் காரணம் அல்ல -கார்த்திகா

கடற்கரை மணலில்
பெயரை எழுதினாள்
கைப் பிடித்து
அழகிய கிறுக்கல் என்றான்

விரல் கோர்த்து நடக்கையில்
அலையென்றால் பயமா?அவன்
கேள்விக்கு தோளணைத்து
சரி என்கிறாள்!

மணல் வீடு கட்டி
அவள் கற்பனையில்
குடி புகும்போது சரித்து
இதழ் மென்றான்

ஒட்டிய மண் துகள்களை
உதறி நடந்தபோதும்
நனையாத அலைகளின்
ஈரம் துடைக்கும்போதும்

அனிச்சையாய் கண்கள்
விரசம் உண்டு விஷமேறியதாய்
அவன் நடித்த போதும்

அவளுக்கு வேறுபாடு
தெரியவில்லை
வெறுப்பு எதுவும்
தோன்றியதாய் ஞாபகமில்லை

எப்படியாவது சீக்கிரமாய்
வீடு செல்ல வேண்டும்..

கொடுத்த காசிற்கு மட்டும்
இந்த புண்ணியவானாவது
வேலை வாங்கட்டும்

இன்றாவது அவள்
கைக் குழந்தை
பசித்து மயங்காது இருக்கட்டுமே!!

எழுதியவர் : கார்த்திகா AK (13-Jun-15, 7:53 pm)
பார்வை : 350

மேலே