நானே செய்த பீட்சாதான்

இன்று நான் செய்த பீட்சாவை உண்ணும் பொழுது உதித்த கவிதை

பீட்சா என்னும் இதனைத்தான்
---பிரியத் துடனே நான்செய்து
காட்டிக் காட்டித் தின்னுகிறேன்
---கவிதை சுவையால் பண்ணுகிறேன்
காட்சி கொண்ட நான்கினிலே
---கடைசி என்றன் கடைவாயில்
மாட்டிக் கொண்ட காரணத்தால்
---மூன்றை முன்னே வைக்கின்றேன் !

அம்மா வுக்கு இதிலொன்று
---அப்பா வுக்கு இன்னொன்று
தம்பிக் கிதிலே சிறுபங்கு
---செய்த எனக்கே பெரும்பங்கு
சும்மா இருக்கும் வேளையிலே
---சுடவைத் திதனை உண்பதுவே
உம்முன் பாடும் என்றனுக்கு
---உரிய பொழுது போக்கறிவீர் !

காணும் ரொட்டி கடைகளிலே
---கிடைக்கும் பத்து ரூபாய்க்கே
நாணின் நிறமாய் சிவந்துநிற்கும்
---நல்ல மசாலா நான்செய்தேன்
பூணும் அதனின் வெள்ளைநிறம்
---பூசும் பாலா டைக்கட்டி
வேணும் என்று யாவருமே
---வேண்டும் சுவையை நல்கிடுமே !

தோசைக் கல்லில் தான்செய்தேன்
---தோய விட்டேன் மிளகுப்பொடி
மேசை தன்னைக் கண்டாலோ
---மேதி னிபோலே குப்பைமயம்
ஆசை வந்து பாய்ந்திடவே
---ஆக்கி வைத்த பண்டமிதை
ஓசை நயமும் ததும்புகின்ற
---ஒண்பா சொல்லிப் பாடுகிறேன் !

வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (5-Jul-15, 9:10 pm)
பார்வை : 60

மேலே