எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள்
எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள்.
.............................................................
ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இக்கரையில் இரண்டு பேர்நின்று கொண்டிருக்கிறார்கள்.
ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப்போவது?
இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது.அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது…நீந்த ஆரம்பித்தது.
இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர்என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.
காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.
இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான்.
இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்… வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.
விளைவு...
இருவருமே ஆற்று நீர் போகும்திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் போக வேண்டிய திசை வேறு.
போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.
கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது.
சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள்.
சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள்.
சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.
ஆம்.,நண்பர்களே.,
உலக நியதி என்ன சொல்கிறது தெரியுமா..?
நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா..?
அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள்.
ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம்
விட்டு விடுங்கள்!