இருவர்

சில இடங்களுக்குச் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போகவேகூடாது. அவற்றில் ஒன்று, குழந்தைகள் மருத்துவமனை.

வாரம்முழுக்கக் குழந்தைகளுக்கு வருகிற சளி, இருமல், காய்ச்சல், இன்னபிற உபாதைகளெல்லாம், பெரும்பாலும் சனி, ஞாயிறு விடுமுறைவரையில் காத்திருக்கவேண்டியிருக்கிறது. பத்துக்கு எட்டு தாய்மார்களும் தந்தைமார்களும் அப்போதுதான் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைகளுக்குப் படையெடுக்கிறார்கள்.

சென்ற சனிக்கிழமை, நங்கையோடு நானும் அப்படி ஒரு பெரிய கூட்டத்தில் மாட்டிக்கொண்டேன். சினிமாத் தியேட்டர் முதல் நாள் க்யூபோல நெரிசல் என்றால் அப்பேர்ப்பட்ட நெரிசல். க்ளினிக் தாண்டி, அதன் வாசல் தாண்டித் தார்ச் சாலையிலும் பெற்றோர், குழந்தைகள் அசதியோடு நின்றிருந்தார்கள்.

நங்கையிடம் ஒரு கெட்ட பழக்கம், வரிசையில் நாங்கள் கடைசியாக நிற்கிறோம் என்றால் அவளால் அதை எப்போதும் ஏற்றுக்கொள்ளவேமுடியாது, ‘எல்லோரையும் தாண்டி முன்னாடி போயிடலாம் வா’ என்பாள் அடாவடியாக.

’இல்லைம்மா, இத்தனை பேர் நமக்கு முன்னாடி வந்திருக்காங்கல்ல? அவங்கல்லாம் போனப்புறம்தான் நாம, சரியா?’

‘நாம ஏன் முன்னாடி வரலை?’

நியாயமான கேள்விதான். ஆனால் என்ன பதில் சொல்வது? மேலே நிழல் பரப்புகிற மரங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் அம்மாக்களுக்குப் பேசுவதற்கு ஏதாவது பொது விஷயம் கிடைத்துவிடுகிறது. குழந்தை ஆணா, பெண்ணா என்பதில் தொடங்குவார்கள், அப்புறம் நார்மல் டெலிவரியா, சிசேரியனா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டபிறகுதான் குழந்தையின் பெயரை விசாரிப்பார்கள், தொடர்ந்து என்ன சாப்பாடு, ஒரு வேளை சாப்பிட்டு முடிக்க எவ்வளவு நேரமாகிறது, முதல் பல் வந்துவிட்டதா, ஆம் எனில், மேல் பல்லா, கீழ்ப் பல்லா? முதல் தவணையில் எத்தனை பற்கள் வந்தன? கீழே படுக்கவிட்டால் குழந்தை தவழ்கிறதா, புரள்கிறதா, எழுந்து நடக்கிறதா, ஓடுகிறதா, ராத்திரி எத்தனை மணிக்குத் தூங்குகிறது, எவ்வளவு நேரம் தூங்குகிறது, பகல் நேரத்தில் அது விழித்து எழுந்தவுடன் செய்கிற அடாவடியில் மற்ற வீட்டு வேலைகளைப் பார்ப்பது எத்தனை சிரமமாக இருக்கிறது, ஸ்கூல் அட்மிஷன் வாங்கியாகிவிட்டதா, ஆம் எனில் எங்கே, எவ்வளவு செலவு ஆச்சு, இண்டர்வ்யூ உண்டா, அது கஷ்டமா எளிதா, அதில் என்னென்ன கேள்விகள் கேட்கப்படும் … இப்படியெல்லாம் இவர்கள் தங்களுக்குள் மணிக்கணக்காகப் பேசுவதற்காகவே, க்யூ அதிகமுள்ள மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள் என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இப்படி அரட்டையடிப்பவர்களில் இரண்டு பேர் தமிழ் பேசுவார்கள், மூன்று பேர் கன்னடம், மீதமுள்ளவர்கள் தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த மொழியில் கேள்வி கேட்க, அடுத்தவர்கள் அவர்களுடைய மொழியில் பதில் சொல்ல, ஆனால் விஷயம்மட்டும் எப்படியோ பரிமாறப்பட்டுவிடும்.

உள்ளே மருத்துவர் ஒரு குழந்தைக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருக்க, இங்கே காத்திருப்பு அறையில் இன்னொரு மினி மருத்துவமனையே நடந்துகொண்டிருக்கும் – ஒவ்வொரு பிரச்னைக்கும் தாய்மார்கள் தங்களுக்குத் தெரிந்த வீட்டு மருந்து, ஆயுர்வேதம், ஹோமியோபதிக் குறிப்புகளையெல்லாம் இஷ்டம்போல் அள்ளி வீசுவார்கள், ‘இது ஒண்ணும் பெரிய பிரச்னையில்லை, தேங்காய் எண்ணெயை நல்லாக் காய்ச்சி அதில நாலு கத்தரிக்காய்க் காம்பை வாட்டி அரைச்சு எடுத்துப் பத்துப் போட்டா ரெண்டு நாள்ல சரியாப் போயிடும்’ என்று போகிறபோக்கில் சொல்வார்கள். இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்டால், ‘எங்க மாமியாரோட சித்தி சொன்னாங்க’ என்று அசட்டையாகப் பதில் வரும்.

நாட்டு மருத்துவம்மட்டுமில்லை, பெரும்பாலான தாய்மார்களுக்கு அலோபதியும் நன்றாகவே தெரிந்திருப்பதுதான் ஆச்சர்யம். ’போனவாட்டி டாக்டரைப் பார்த்தப்போ ABCD மருந்து கொடுத்தார், நல்லாக் கேட்டுச்சு, ஆனா இந்தவாட்டி அதைக் கொடுத்தும் ஜுரம் மட்டுப்படலை, சரி, இப்போ PQRS மருந்தைக் கொடுத்துப் பார்க்கலாமான்னு டாக்டரை விசாரிச்சுகிட்டுப் போக வந்தேன்’ என்பார்கள் சர்வ சாதாரணமாக.

இப்படி எல்லா வியாதிக்கும் தெளிவாக மருத்துவம் தெரிந்துவைத்திருக்கிற பெண்கள், ஏன் டாக்டர்களைப் பார்க்க வரவேண்டும்? எனக்கு இன்றுவரை புரியாத விஷயம் இது.

கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் க்யூவில் காத்திருந்தபிறகுதான் எங்களால் மருத்துவமனைக் கூரைக்குள்ளேயே நுழையமுடிந்தது. இன்னும் டாக்டர் அறையை நெருங்க ஏழெட்டு பேரைத் தாண்டவேண்டும்.

இதற்குள் நங்கை முற்றிலுமாகப் பொறுமையிழந்திருந்தாள், ‘நாம எப்பப்பா டாக்டரைப் பார்க்கறது’

’கொஞ்சம் பொறும்மா, இவங்கல்லாம் உள்ளே போய்ட்டு வந்துடட்டும், அப்புறம் நாமதான்’

’போப்பா, எப்பப் பார்த்தாலும் நமக்கு முன்னாடி யாராச்சும் இருக்காங்க, சுத்த போர்’ என்றாள் அவள், ‘எனக்கு உடனே டாக்டரைப் பார்க்கணும்’

’ஃபைவ் மினிட்ஸ் பொறுத்துக்கோம்மா, பார்த்துடலாம்’, அன்றைய தினத்தில் இருபதாவது தடவையாகச் சொன்னேன்.

அது ஒரு சின்னஞ்சிறிய அறை. சுவரில் சில குழந்தைப் படங்கள், டாக்டரின் மனைவியோ, மகளோ வரைந்த மயில் ஓவியம், இதே க்ளினிக்(Hospital = மருத்துவமனை, Clinic = ??)கிற்கு வேறு நேரங்களில் வருகை தரும் மற்ற டாக்டர்களைப்பற்றிய விவரங்கள் அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தன. சின்ன பெஞ்ச் ஒன்று, நாற்காலிகள் மூன்று, மூலையில் ஒரு வாஷ் பேஸின், அதை ஒட்டினாற்போல் தண்ணீர் சுத்திகரிக்கும் உருளை.

தடுப்புக்குப் பின்னாலிருந்து டாக்டரின் குரல் கேட்டது. சரளமாக மலையாளம் பேசிக்கொண்டிருந்தார்.

அந்த டாக்டர் மலையாளி இல்லை, உள்ளூர்க் கன்னடக்காரர்தான். ஆனால் தமிழ், ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு என எல்லாமே நன்றாகப் புரிந்துகொள்வார், தடங்கலில்லாமல் பேசுவார்,

மற்ற இடங்களில் எப்படியோ, மருத்துவமனையில், டாக்டரிடம் தங்களுடைய பிரச்னையைச் சொந்த மொழியில் சொல்லி, அதே மொழியில் சந்தேகங்களைக் கேட்டு ஆலோசனை பெறுவதுதான் பெரும்பாலானோருக்குப் பிடித்திருக்கிறது. அதனால்தானோ என்னவோ, பெரிய மருத்துவமனைகளில்கூட இல்லாத கூட்டம் இந்தச் சின்னஞ்சிறு Multi-Lingual க்ளினிக்கைத் தேடி வருகிறது.

நாங்கள் மருத்துவரின் அறையை நெருங்கியபோது, எங்களுக்குப் பின்னால் இன்னும் நீண்ட கூட்டம் நின்றுகொண்டிருந்தது. மணியைப் பார்த்தேன், 1:15.

மருத்துவமனை போர்டில் ‘பார்வை நேரம்: 9:30 முதல் 1 வரை’ என்று எழுதியிருந்தது. ஆனால் இங்கே இருக்கிற கூட்டத்தைப் பார்த்தால், இந்த டாக்டர் மூன்றரை, நான்கு மணிக்குக்கூட வீட்டுக்குப் போகமுடியாது என்று தோன்றியது.

இதற்குள், எங்களுக்கு முன்னால் இருந்த ஒரு தம்பதியர் இரட்டைக் குழந்தைகளோடு டாக்டர் அறைக்குள் சென்றார்கள். அடுத்து நாங்கள்தான்.

இப்போது க்யூவில் நாங்கள்தான் முதலாவதாக நிற்கிறோம் என்பதால், நங்கையின் முகத்தில் முதன்முறையாகச் சிரிப்பு வந்தது, அதை உறுதி செய்துகொள்வதற்காக, ‘இவங்க வெளியே வந்ததும் நாம டாக்டரைப் பார்க்கலாமாப்பா?’ என்றாள்.

‘ஆமாம்மா’

இந்த நேரத்தில், வரிசையை நெட்டித் தள்ளிக்கொண்டு இரண்டு பேர் உள்ளே நுழைந்தார்கள், ‘டாக்டரைப் பார்க்கணும்’

நான் அவர்களை விரோதமாகப் பார்த்தேன், ‘நாங்க எல்லோரும் அதுக்குதான் காத்திருக்கோம், பின்னாடி க்யூவிலே வாங்க’

முதல் ஆள் இரண்டாவது ஆளின் தோளைத் தொட்டுக் காண்பித்தார், ‘இவருக்கு ரொம்ப உடம்பு சரியில்லை, மயக்கம் போட்டு விழுந்திடுவார்போல, நாங்க உடனடியா டாக்டரைப் பார்த்தாகணும், ப்ளீஸ்’

எனக்குச் சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது, ‘இவர் சைல்ட் ஸ்பெஷலிஸ்ட், தெரியாதா?’ என்றேன்.

‘அப்படீன்னா?’

‘குழந்தைங்களுக்குதான் வைத்தியம் பார்ப்பார்’

’பரவாயில்லை சார், இவருக்கு ரொம்ப முடியலை’ என்றார் அவர், ‘கொழந்தைங்க டாக்டரோ, பெரியவங்க டாக்டரோ, ஏதாச்சும் ஒரு மருந்து கொடுத்தாப் போதும்’

’சரி ஓகே’, நான் பின்னே நகர்ந்துகொண்டேன், அவர்கள் டாக்டர் அறைக் கதவுக்கு அருகே போய் நின்றார்கள்.

இப்போதுதான் என்னால் அவர்களைத் தெளிவாகப் பார்க்கமுடிந்தது. இருவரும் மிக அழுக்கான ஆடைகளை உடுத்தியிருந்தார்கள். நோயாளியின் பனியன், லுங்கி, துண்டு, அவரோடு வந்தவருடைய பேன்ட், சட்டை அனைத்திலும் திட்டுத் திட்டாகக் கறுப்பு அப்பியிருந்தது.

அதுகூடப் பரவாயில்லை, அவர்களிடமிருந்து வந்த நாற்றம், அதுதான் தாங்கமுடியாததாக இருந்தது. அது குளிக்காத நாற்றமா, அல்லது ஏதாவது ‘அருந்தி’விட்டு வந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

பொதுவாகக் குழந்தை மருத்துவமனைகளுக்கென்றே ஒரு விசேஷமான நறுமணம் உண்டு. அதை இந்த இருவரும் தலைகீழாக மாற்றிக்கொண்டிருந்தார்கள்.

இவர்கள் இருவரையும் வரிசையில் அனுமதித்த குற்றத்துக்காக, பின்னால் காத்திருந்த மற்ற பெற்றோர் என்னை முறைக்க ஆரம்பித்திருந்தார்கள். நான் வேண்டுமென்றே பார்வையை வேறு திசைக்குத் திருப்பவேண்டியிருந்தது.

அதுவரை, ஒற்றைக் காலில் மாறி மாறி நின்றபடி, ‘எப்போப்பா நாம டாக்டரைப் பார்க்கலாம்’ என்று கெஞ்சிக்கொண்டிருந்த நங்கை, இப்போது அந்த இருவரையும் ஆர்வத்தோடு கவனித்துக்கொண்டிருந்தாள். என் சட்டையைப் பிடித்து இழுத்து, ‘அந்த மாமாவுக்கு என்ன ஆச்சு?’ என்றாள்.

‘உடம்பு சரியில்லைம்மா, டாக்டரைப் பார்க்கப் போறாங்க’

’டாக்டர் அவங்களுக்கு ஊசி போடுவாரா?’

‘தெரியலையே’

அவள் கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘அவங்க போனப்புறம்தான் நாம போகணுமா?’ என்றாள்.

நான் பதில் சொல்வதற்குள், டாக்டரின் அறைக் கதவு திறந்தது. அந்த இருவரும் அவசரமாக உள்ளே நுழைந்தார்கள்.

பத்து நிமிடம் கழித்து அவர்கள் வெளியேறும்வரை, நங்கை எதுவும் பேசவில்லை. அதன்பிறகும், அவர்களைதான் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

முழுசாக ஒன்றரை மணி நேரக் காத்திருப்புக்குப்பிறகு, நாங்கள் டாக்டரிடம் சரியாக இரண்டு நிமிடங்கள்மட்டும் பேசினோம். வழக்கமான மருந்துகளை எழுதி வாங்கிக்கொண்டு வெளியே வந்தபோது, பின்னணியில் யாரோ ‘ஜரகண்டி ஜரகண்டி’ என்று ஆறு மொழிகளில் சொல்வதுபோலத் தோன்றியது.

எங்களை முந்திச் சென்ற அந்த இருவர், மருத்துவமனை வாசலில் தளர்ந்து உட்கார்ந்திருந்தார்கள். லுங்கி அணிந்திருந்தவர் சாக்கடையில் குனிந்து வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார்.

அவருக்கு என்ன பிரச்னை? இந்தக் குழந்தை மருத்துவருடைய வைத்தியம் அவருக்குப் போதுமா? அல்லது, இன்னொரு பெரிய மருத்துவரைத் தேடிச் செல்லவேண்டியிருக்குமா? நானும் நங்கையும் செய்வதறியாது அவரைப் பார்த்துக்கொண்டு நின்றோம்.

சிறிது நேரத்துக்குப்பிறகு, மருந்து வாங்குவதற்காக நாங்கள் சாலையைக் கடந்தபோது, அவர்கள் எழுந்து நடக்க ஆரம்பித்திருந்தார்கள். அப்போது இருவருடைய நடையிலும் கொஞ்சம் வேகம் கூடியிருந்ததாகத் தோன்றியது என்னுடைய கற்பனையாகக்கூட இருக்கலாம்.

நான்கைந்து ’டானிக்’ அல்லது ’சிரப்’களுக்குள் எல்லா வியாதிகளும் குணமாகிவிடுகிற, நம்முடைய மருந்துகளை அம்மா நினைவில் வைத்துக்கொள்கிற குழந்தைப் பருவம் கடந்துவிட்டால், வாழ்க்கைதான் எத்தனை சிக்கலாகிவிடுகிறது!

***

என். சொக்கன் …

29 06 2009

எழுதியவர் : செல்வமணி (17-Sep-15, 10:15 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : iruvar
பார்வை : 101

மேலே