அந்த அடர்வனம்
அந்த அடர்வனம்
அதனூடே பாய்ந்த
வெள்ளை அருவிகள்
சிடுக்கு விழுந்த
ஒற்றையடி பாதைகள்
ஒய்யாரமாய் தலையசைத்த
கிளிகள்
வெடுக்கென துள்ளிய
முயல்கள்
வெறி கொண்டு விரட்டிய
ஓநாய்கள்
ஓங்கி வளர்ந்த
மூங்கில்
கீழே விழுந்த சருகுகள்
அங்கு பின்னி கிடந்த
பாம்புகள்
சில்லிட செய்த
பேரமைதி
சின்னதாய் உலுக்கும்
வண்டுகளின்
ரீங்காரம்
ஒரு கணம்
உலகம் மறந்து
தொட முயன்றேன்..
வெண்பஞ்சு மேகமாய்
கரைந்தோடியது
அந்த அடர்வனம்
திகைத்து திணறி
விழித்து கொண்டேன்
தீயாய் சுட்டது
காலை கதிரவன்
இன்னொரு கனவிற்கு
வழியில்லை
விரைந்தேன்
கையில் விதைகளோடு
காடு நோக்கி..