காமராஜரின் கடைசி நாள்

காமராஜரின் கடைசி நாள் நிகழ்ந்தவைகளைக் காட்சிகளாக்கிப் பார்த்தால் படிக்கிற யாவருக்கும், தானாக்க் கண்ணீர் வரும். நெஞ்சிலே சோகம் நின்று நெறுடும்.

1975 – ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், 2 – ஆம் தேதி அன்று காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம் நாடெங்கும் அந்த நாளிலே, சென்னை தி.நகர், திருமலைப் பிள்ளை சாலையிலே என்ன நடந்தது?

காமராஜர் வழக்கம் போல் எழுந்து காலைக் கடன்கள் முடித்து குளித்து இட்லி, தேங்காய்ச் சட்னி சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு உட்கார்ந்து செய்தித் தாள்களைப் படித்துக் கொண்டு இருக்கிறார்.

சட்டக்கல்லூரி மாணவர்கள் வந்து சந்திக்கிறார்கள். கேள்விகள் கேட்கிறார்கள். அவர்களுடன் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருக்கிறார். அவர்கள் சென்றதும் சற்று காலதாமதமாக பகல் 1.30 மணிக்கு உணவு சாப்பிடுகிறார். உதவியாளர் வயிரவன் தான் பறிமாறுகிறார். ஓய்வு எடுத்துக் கொள்கிறார்.

சிறிது நேரம் கழித்து வயிரவனைக் கூப்பிட்டுத் ”தலையெல்லாம் வேர்க்கிறதே” – என்றார். அவர் தலையைத் துவட்டி விடுகிறார். ”டாக்டரைக் கூப்பிட்ட்டுமா?” என்கிறார். உதவியாளர். ”சௌரிக்கு போன் போட்டுக் கனக்சன் எனக்குக் கொடு” – என்கிறார் காமராஜர். எவ்வளவோ டயல் செய்தும் டாக்டர் சொளரிராஜன் கிடைக்கவில்லை. பின்னர் டாக்டர் ஜெயராமனுக்கு டயல் செய்து காமராஜரே பேசுகிறார்.

”என் உடலெல்லாம் வியர்க்கிறது. ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட அறையில் இப்படி வேர்க்கிறதே” என்கிறார் காமராஜர்.

”ஐயா! மூச்சுத் திணறுகிறதா? மார்வலி இருக்கிறதா?” எனப் பல கேள்விகளைக் கேட்கிறார் காமராஜரிடம்.

”அதெல்லாம் ஒன்றுமில்லை. ரொம்ப வேர்த்துக்கிட்டு இருக்கு,. அவ்வளவுதான்.” – என்று கூறிய காமராஜர், டாக்டர் ஜெயராமனை உடனே புறப்பட்டு வரும்படி கூறுகிறார்.

பின்னர் மணியடித்தார். வயிரவன் வந்து நின்றான். வரும்போது இரத்த அழுத்தம் பார்க்கிற கருவியையும் டாக்டரை எடுத்துக் கொண்டு வரச் சொல்லு. டாக்டர் வந்தால் எழுப்பு. விளக்கை அணைத்து விட்டுப் போ” – என்றார் காமராஜர்.

இந்தப் பேச்சே பெருந்தலைவர் காமராஜர் மூச்சு போகுமுன் பேசிய கடைசிப் பேச்சு.

உள் விளக்கை அணை என்றவர், ஏன் உயிர் விளக்கை அணைத்துக் கொண்டார்.
டாக்டர் சௌரிராஜன் வந்தார். பார்த்தார்.”ஐயோ! பெரியவர் போய் விட்டாரே” என்று கீழே விழுந்து புரண்டு அழுதார். டாக்டர் ஜெயராமன் வந்தார். அதன் பின் டாக்டர் அண்ணாமலை வந்தார். யார் வந்தால் என்ன?

போன உயிரை மீட்கவா முடியும். செய்தி பரவியது. நாடே திரண்டது. முதலமைச்சர், பிரதமர், அமைச்சர்கள், தலவர்கள் எல்லோரும் வநுத் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் இராஜாஜி ஹால் ஊர்வலம். உடலுக்கு தீவைப்பு. நினைவாலயம்.

கடைசி நாளில் சென்னை, தி.நகர், திருமலைப் பிள்ளை சாலை, எட்டாம் எண், காமராஜர் இல்லத்தில் என்ன நடந்தது என்பதைச் சற்று தெளிவாகச் சித்தரிக்கவே இதை எழுதிக் காட்டினேன்.

அடுத்தது என்ன நடந்தது என்பதனை எல்லாம் இந்த அத்தியாயத்தின் முன் பகுதியிலேயே எழுதிக் காட்டியிருக்கிறேன்.

காமராஜர் காலமான செய்தி தமிழகம் முழுதும் பரவியது. எல்லா மாட்டத்து மக்களும், இராஜாஜி மண்டபத்துக்குத் திண்டோடி வந்தார்கள். லடசோப லடசம் மக்கள, மகள் தொண்டருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இந்தியா முழுதும் செய்தி பரவியது. ஏன் உலகம் முழுதுமே செய்தி போயிற்று.

பிரிட்டிஷ், ரஷ்ய , அமெரிக்க மற்றும் பற்பல நாட்டுத் தலைவர்கள் இரங்கற் செய்திகளைப் பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பியிருந்தார்கள்.
தன்னை பிரதமராக்கிய தலைவனுன் உடலுக்குப் பிரதமர் வந்து மலர் வளையம் வைத்து வணங்கிக் கண்ணீர் விட்டார்.

காமராஜர் மீது கொண்டிருந்த பெரிய மரியாதையால் அப்போதிருந்த முதலமைச்சர் மு. கருணாநிதி தகனம் செய்ய அரசின் இடம் தந்ததோடு நினைவாலயமும் கட்டித் தந்தார்.

விருட்சம் வித்தாகிவிட்டது. காத்திருப்போம். பின்பொருநாள் கட்டாயமாக அந்த வித்து தமிழ் மண்ணில் முளைத்து விருட்சமாகும். அண்டி வருபவர்களுக்கு அந்த ஆலமரம் காலமெல்லாம் நிழல் தரும்.

வாழ்க காமராஜ் புகழ்!

எழுதியவர் : காமராஜர் பேத்தி (23-Oct-15, 9:08 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 274

மேலே