அது கார்காலம்
உல்லாசங்களை விளைவிக்க
உயிர்க்குச்சி ஊன்றி
உதிரம் பாய்ச்சி
உறவுகள் இட்டுக் கொண்டிருந்தாய்
சித்திரங்களுக்குத் தெரியாத
சில புன்னைகைகளை
சிதறிக் கிடந்த மேகத் துண்டுகளுக்குள்
ஒளித்துக் கொண்டிருந்தாய்
வரைந்த வானவில்லில்
விட்டுப் போன இடைவெளிகளில்
நிறங்கள் நிரப்பிக் கொண்டிருந்தாய்
ஒற்றைச் செடியில்
ஓராயிரம் பூக்களுக்காய்
இதழ்கள் சேகரித்துக் கொண்டிருந்தாய்
வினோதத் தாவரங்களுக்கு
விலாசப் பூக்கள்
விதைத்துக் கொண்டிருந்தாய்
குளித்து பிரகாசித்த கலசங்களைக்
குசலம் விசாரித்துக் கொண்டிருந்தாய்
தனிமையில் உருண்டாடிய துளியை
தண்டுக்கு முத்தமிடச் சொல்லிக்
கரைத்துக் கொண்டிருந்தாய்
இவை அனைத்தையும் நீ
செவ்வனே செய்து முடித்ததாய்
சிரித்துக் கொண்டிருந்தாய்
உனக்குத் தெரியாமலேயே
இமைக் கால்களில்
உன்னை சுவாசித்துக் கொண்டிருந்தேன்
...மீ.மணிகண்டன்