காதல் போதையில் நான் --கயல்விழி

கொடுப்பதில் கர்ணனாய்
இருந்த போதும் -என்னிடம்
கஞ்சத்தனம் செய்யும் உன் பார்வைக்காய் காத்திருக்கின்றது
விழிகள் .

இளையராஜாவும் எம்.எஸ்.வியும்
இணைந்தே என்னுள் இசையமைக்கின்றார்கள்
என்னை நீ கடந்துசெல்லும்
இரண்டொரு நொடிகளில் .

உன் தினக்குறிப்பேட்டை
தினமும் முத்தமிட வைக்கிறது எச்சில் தடவப்பட்ட
பக்கங்கள் .

காதறுத்த உன் செருப்பும்
என் மஞ்சத்தோடு ஒட்டிக்கிடக்கிறது
பரதனின் ஆட்சி பீடத்தில்
ராமரின் அடையாளமாய் .

அதிகாலை பனியின் இதமான சுகத்தை மிஞ்சி என் கன்னத்தோடு ஒட்டிக்கொள்கின்றது
குழந்தைக்கென நீ கொடுத்த
பறக்கும் முத்தம் .

தலையணைகள் தன்னை தழுவுதலுக்கு தடைவிதித்துவிட்டன
கனவில் உன் சில்மிஷங்கள்
அத்துமீறிவிட்டனவாம் .

உன் அன்னையின் கருவறை மேல்
பொறாமைப்பட்டுக்கொள்கிறது என்
இதயம்
உன்னை எனக்கு முதல் சுமந்துவிட்டதால் ...!! !

எழுதியவர் : கயல்விழி (3-Nov-15, 3:09 pm)
பார்வை : 502

மேலே