வரியெல்லாம் குருதி

வரியெல்லாம் குருதி !
- திருச்சி ஏ எம் அப்துல் காதர் ஹசனி
++++++++++++++++++++

ஆம்!
குருதி குடித்து குடித்து
குண்டான ஏகாதிபத்தியங்கள்!

பணத்திற்காக
பிணந்தின்னும்
வல்லரசுகள்!

குண்டுவெடித்து
சிலர் செத்தால்
அது பயங்கரவாதம் !
குண்டு போட்டு
பலரை கொன்றால்
அது பயங்கரவாத ஒழிப்பு போர் !


ஒருவன் யாசித்தும்
அவனை பட்டினி போட்டால்
அது மனித தன்மையற்ற செயல் !
ஐ நா கண்டிக்கும்!

பொருளாதாரத்தடை விதித்து
ஒரு நாட்டிற்கே பட்டினி போட்டால்
அது புதிய பொருளாதார கொள்கை !
ஐ நா பாராட்டும் !

மனித உயிர்களை
ஏற்றுமதி செய்தாவது
அணு ஆயுதங்களை
இறக்குமதி செய்வோம் !
இது
புதிய பாதுகாப்புக்கொள்கை !

ஜாக்கிரதை !
யாரும் விமர்சனம்
செய்து விடாதீர்கள் !!
தேச துரோகியாகிவிடுவீர்கள் !

நீதி கேட்டு
போராடாதீர்கள் !
அநீதமிழைக்கப்படுவீர்கள் !

ஐக்கிய நரிகளின்
மாமந்தைகளில்
ஆடுகளுக்கு
ஒருபோதும்
நீதி கிடைக்கப்போவதில்லை !

உலக அரசியலை
ஒருவரியில் எழுதிவிட
நினைத்தேன்.
வரியெல்லாம் குருதி !

எழுதியவர் : திருச்சி ஏ எம் அப்துல் காத (29-Dec-15, 5:29 pm)
பார்வை : 92

மேலே