நாளைய தலைப்பு

* * * * * * * * * * * * *
என் பெருமைக்குரிய தேசமே !
துயர் இரவில்
நாளைய ஒளியைப் பொசுக்கி
அஸ்தி காண
சுவடுகளாய் சுழன்று நிற்காதே !

ஆழமான தகர்ப்புக்களால்
நசுக்கப்பட்ட நம்பிக்கைகள் ,
ஒடுக்கப்பட்ட
உன் உயர்ச்சிகள் ,
திருடப்பட்ட
சிரிப்பின் சிதறல்கள் ,
களங்கப்பட்ட
இரத்தம் உறை சுவர்கள் ,
சூறையாடப்பட்ட
இருப்பின் உண்மைகள் ,
அகழ்ந்தெடுக்கப்படலாம் . - ஆனால்

என் பேரன்பு மிக்க தேசமே !
கறை அற்ற
புன்னகை தவழ் !
குறைவற்ற
நிலை இருப்புக் கொள் !
நடுக்கமின்றிய
வாழ்வை நகர் !
நம்பிக்கை பொருந்திய
சீர் விளைவு பெறு !
யார் தாக்கினும்
தோற்காத நகராய் இரு !
விண்ணைத் தாண்டிய
முனைப்புடன் வீறு கொள் !
வழிகாட்டியாகும்
வாக்கு மொழிகள் கொடு !
விஞ்சாத உறுதியில்
விடியலைப் புனை !
இளைஞனே !
நாளைய தலைப்புக்களே !!!
கருக்கொள் !
நிலைகொள் !
விண்ணைத்தொடு !
விடிவை நாட்டு !!!!!

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (2-Jan-16, 5:11 pm)
பார்வை : 83

மேலே