இயற்கை
விடியற்காலை விறகடுப்பில்
சோறு சமைக்கும் அம்மா...
ஏர் கலப்பையை தோளில் சுமந்து
மாடுகளுடன் செல்லும் அப்பா...
நெற்கதிர்களை சுமந்து நிற்கும்
வயலுக்கு நீர் பாய்ச்சும் அண்ணன்...
குருவிக்கூட்டில் முட்டைகளை
எண்ணி பார்த்தும்
குட்டைகளில் தேங்கி நிற்கும்
மழை நீரில் தவழும்
தலைபிரட்டைகளை மீன் குஞ்சுகள்
என நினைத்தும்...
நீரோடையில் குளித்தும்
சாலையோர இலந்தை மரத்தடியில்
உதிர்த்திருக்கும் பழங்களை
எடுத்து தின்றும்.....
விடுமுறை நாட்களில்
மரக்கிளையில் கொடியினால்
ஊஞ்சல் கட்டி ஆடியதும்....
கூட்டான் சோறாக்கி
கூடி உண்டு மகிழ்ந்ததும்
இன்று குழந்தைகளிடம் கூறினால்
சுவரில் மாட்டியிருக்கும்
இயற்கை படத்தை பார்த்து
கதை சொல்லுதடா அம்மா.....