போகன் வில்லா தரும் பாடம்

போகன் வில்லா தரும் பாடம்

பல வண்ணங்களில் " பூத்துக் குலுங்கும் ' போகன் வில்லா செடியை பல வருடங்களாகப் பார்த்திருக்கிறேன். இதுவரை அந்தச் செடி பல வண்ண மலர்கள் கொண்டது என்றே எண்ணியிருந்தேன். இப்போதுதான், சற்று உற்று நோக்கியபோது, பல நிறங்களுடன் மிளிர்வது மலரல்ல, அச்செடியின் இலைகளே என்று அறித்தேன்!
அந்த வண்ண இலைக் கொத்துக்குள்ளே மறைந்து காணப்பட்டது, சிறிய பூவொன்று!

இதை அறிந்து கொள்ள எனக்கு இவ்வளவு வருடங்கள் ஆனது.! நான் மட்டும்தான் இப்படி ஏமாந்து இருந்தேனா, அல்ல்லது மற்றவர்களும் இப்படித்தானா ?

நேரம் கடந்து அறிந்தாலும் , இதிலும் ஒரு இயற்கைப் பாடம் உண்டு என்று உணர்ந்தேன்!


காலையில் காற்றாட நடைபழகும் நேரம்
கண்களைக் கவர்ந்திடும் வண்ணநிறக் கோலம்
சாலையின் இருமருங்கில் பூத்துக் குலுங்கும்
"போகன் வில்லா"ச் செடிகளின் கூட்டம்.

வெள்ளை, ஊதா , வெளிரிளஞ் சிவப்பில்
வண்ணக் கலவையை அள்ளித் தெளித்து
கொள்ளை அழகுடன் காணுமக் கோலம்
செடிகளின் முடிகளில் முளைத்த ரங்கோலம்.#

பன்னாட்கள் இவ்வழியே நான்சென்ற போதும்
இவ்வழகை நெருங்கிநான் ரசித்ததே இல்லை.
இன்னாளே அச்செடியின் அருகிலே சென்று
நோக்கினேன் ! வியப்பிலே விழிகள் முழித்தேன்.!

மலரென்று இதுவரையில் நான்நினைத்த தெல்லாம்
இலைகளே என்பதை இன்றே அறிந்தேன்.
பலஇலைகள் நடுவே வெளிர்வெண் ணிறத்தில்
சிறிதாகப் பூவொன்று சிரித்திருக்கக் கண்டேன்..

இலைகளே மலரென்று நான்மயங்கி னாலும்
மதுவுண்டு மலர்விட்டு மலர்தாவும் வண்டோ
வெளிவண்ணத் தோற்றத்தில் ஏமாந்தி டாமல்
உள்ளே ஒளிந்துள்ள மலரையே நாடும்.

வெளிப்பூச்சாய் வண்ணங்கள் கொண்டஇலை யொத்த
திசைமாற்றும் ஈர்ப்புபல வாழ்விலே உண்டு.
தெளிவுடன் அப்பொருள் அத்தனையும் நீக்கு.
உள்ளிருக்கும் மலரொத்த உட்பொருளை நாடு.

கொத்தான இலைநடுவே மறைந்தமலர் மொட்டு -அதை
சத்தான உண்மையெனக் கண்டெடுக்கும் வண்டு
முத்தான ஓருண்மை இச்செயலில் உண்டு!
முத்தியை நாமடைவோம் அவ்வுண்மை கண்டு !

எழுதியவர் : ரமேஷ் ( கனித்தோட்டம் ) (2-Apr-16, 10:19 am)
பார்வை : 129

மேலே