நான் முதல்வரானால்

முதல்வராக நானானால் முதல்பணியாய் முன்னின்று
.*****முழுவீச்சில் மதுவிலக்கை அமல்படுத்த முனைந்திடுவேன்!
பதவிக்கு மதிப்பளித்து பகுத்தறிந்து திட்டமிட்டு
****பசிப்பிணியை நாட்டைவிட்டு விரட்டிடவே பாடெடுப்பேன் !

விவசாயம் பெருக்கிடவே விரிவான நலத்திட்டம்
****விரைவாகச் செயல்படுத்தி விவசாயி நலம்காப்பேன் !
அவதியிலே வாடுகின்ற அகதியர்தம் நிலைமாற
****அவசரமாய் ஆணையிட்டு அமைதியுடன் வாழவைப்பேன் !

விலையில்லா மருத்துவத்தை ஏழையர்க்கு வழங்கிடவே
***மேன்மையான வசதிகளை மாநிலத்தில் புதுப்பிப்பேன் !
வலைதளத்தில் பணியிடத்தில் வன்கொடுமை நேராமல்
****வஞ்சியரைக் காப்பதற்கு சட்டத்தைச் சீர்செய்வேன் !

கலவரத்தைத் தூண்டிவிடும் சாதிமத வெறியர்களை
****கையிருப்பைப் பிடுங்கிவிட்டு நாட்டைவிட்டே கடத்திடுவேன் !
உலகமொழி அத்தனையும் ஆவலுடன் பயின்றாலும்
****உயிர்மொழியாம் தமிழ்மொழியில் கல்விபெறச் செய்திடுவேன் !

உழைத்துவாழ ஏதுவாக வேலைவாய்ப்பை அதிகரித்து
****உறுதியான உள்ளத்தால் குடிமக்கள் உயரவைப்பேன் !
பிழையென்று தெரிந்திருந்தும் கையூட்டு வாங்குவோரை
****பிடித்தவுடன் அக்கணமே பணிநீக்கம் செய்திடுவேன் !

பொருணைமுதல் கங்கைவரை நதிநீரை இணைத்திடவே
****பொறுப்புடனே செயலாற்றி மண்ணிற்குப் புகழ்சேர்ப்பேன் !
கருணைபொங்கும் மனத்தினளாய் கண்போலக் கடமைகளைக்
****கண்ணியமாய் பார்மெச்ச இறையருளால் செய்திடுவேன் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (5-Apr-16, 10:44 am)
பார்வை : 668

மேலே