தீக்குச்சி மலர்கள்

பறவைகளுக்காக வெடிக்காத
இந்தப் பூமியில்
மனித மலர்கள் வெடிகளாய்
காட்சியளிப்பது வேதனையன்றோ!
பிஞ்சு விரல்கள் நுனியில்
கந்தகப் பொருட்கள் ;
முகங்களில் கரிய நிறம்
சுவாசிக்கும் ஆக்ஸிஜன்
கார்பனாக;
விடியலைத் தேடி
அவர்களின் விழிகள்;
வறுமை என்ற மூட்டைக்குள்
கட்டப்பட்ட அவர்களின் பால்யங்கள்;
கரம் குலுக்கும் மனிதர்களிடையே
மனம் உலுக்கும் நெஞ்சங்கள்;
வறுமை நதியோடிய
வாழ்க்கை கரைகள்;
லட்சுமி, சரஸ்வதி, ராமர்,
கிருஷ்ணர் வெடிகளாய்
செய்தாலும் அவர்களின்
வாழ்க்கையை ஒளியேற்ற
வராக் கடவுள்கள்;
கடவுள்களை கரங்களில்
வைத்திருக்கும்
நாத்திக தீபங்கள்!
வெடிகளுக்குள்ளும் அவர்களிடையே
எழும் சிரிப்பு
அதான் மத்தாப்பு
இந்த மலர்களுக்காக
நாம் செய்ய வேண்டிய
ஒன்று
தீபாவளிக்காக
வெடி கொளுத்தாமல்
அவர்களின் வாழ்விற்காக
சிறு தீக்குச்சியாவது ஏந்துங்கள்!