புதியதோர் உலகம் --போட்டிக் கவிதை --முஹம்மத் ஸர்பான்
உரிமைகளும் உடமைகளும்
எங்கள் உலகில் காக்கப்படும்.
பாவங்களும் பொய்களும்
தடியால் அடைத்து விரட்டப்படும்.
***
நிலவும் பகலில் பூக்கும்
கதிரவனும் இரவில் உதிக்கும்.
முள்ளில்லாத பூக்கள் விளையும்.
பூக்களும் மனந்திறந்து பேசும்.
***
காற்றும் மரங்களை காதலிக்கும்
மனிதனும் பசுமையை நேசிப்பான்.
கடலும் கரையை சுவாசிக்கும்
குயிலும் அரசியல் சாசனம் வாசிக்கும்.
***
பாலைவனத்தில் பால்மழை வானிலை
அடர்ந்த காட்டில் மான்கள் அரசாட்சி
குருடனும் செவிடனும் வாக்காளர்கள்
கூண்டுக்கிளிகளும் சுதந்திர பறவைகள்
***
சிகப்பு விளக்கு விபச்சாரிகளும் சேற்றில்
நாற்று நட்டு மானத்தோடு வாழ்வார்கள்.
பிறப்பின் பிழையான அரவாணிகளுக்கும்
தனியான கல்லூரிகள் இங்கே கட்டப்படும்.
***
சாக்கடை தொழிலாளி நெஞ்சம் தூய்மையானது
தேசத்தின் பொறுப்பும் இவனிடம் ஒப்படைக்கப்படும்.
வியர்வையால் அறுவடை தருகின்ற உழவனால்
விதைநெல் விலையை தீர்மானிக்கும் அமைச்சரவை.
***
மதுவெனும் நஞ்சை விற்கும் விஷமிகள்
தெருவில் கல்லறிந்து கொல்லப்படுவார்கள்.
சிறுமியை விபச்சாரம் செய்யும் காமர்களின்
அந்தரங்க உறுப்பும் கத்தியால் அறுத்தறியப்படும்.
***
முதியோர் இல்லங்கள் முற்றுகை செய்யப்படும்.
முகவரியிழந்த உலகில் கருவறை காவியம் எழுதப்படும்
பெண்ணின் அந்தரங்கத்தை மறைவில் பணமாக்கும்
முகவர்கள் கண்கள் காக்கைக்கு உணவாக வீசப்படும்
***
வட்டியெனும் ஆயுதத்தால் உதிரத்தை உறிஞ்சுபவன்
தாகம் நீரிருந்தும் கருங்கற்களால் நிரப்பப்படும்...,
சோலைகளில் மழலையாய் முடவர்களும் வருவார்கள்.
அன்பின் கண்ணீராகும் கண்கள் எங்கள் வேதம்.
***
பாவங்களை தண்டனையால் அழித்திடுவோம்.
நன்மைகளை உணர்வின் வெகுமதியில் சேர்த்திடுவோம்.
அச்சம்,மடமை,இருண்மை,அநீதிகள் இல்லாத
நிம்மதியெனும் அமைதியில் புதியதோர் உலகம் செய்வோம்
***