குளம் பார்த்தல்
தெப்பக் குளத்தில் விழுந்திருக்கும்
நீராழி மண்டப நிழல் போல
குளத்து நீரில் மிதக்கும்
ஒற்றைக்கால் கொக்கின் பிம்பம் அறியாமல்
நீந்தும் மீன்கள்
சூரியனை சலனப் படுத்தியபடி
தாமரை விதையொன்று
சேற்றில் புதையும்
குளத்தை சலனப் படுத்தாமல்
தண்ணீருக்குள் நீந்தும் முக்குளிப்பான்
சட்டென்று தலை நீட்டி
உங்களுக்கு சொர்க்கம் காட்டும்
தண்ணீருக்கு மேல்
அரை வட்டமடிக்கும் மீன்களை
அலகில் கவ்விச் செல்லும் நாரைகள்
தலை நிறைய கள்ளுடன்
கரையில் நிற்கும் பனை மரங்கள்
நீருக்குள் குப்புற விழுந்து கிடக்கும்
குளத்து நீரில்
இரவில் கவியும் பிறை நிலா
படகு விட்டு மகிழும்
தியானம் என்பது
நீர் நிறைந்த
குளம் பார்த்தல்