மீண்டும் மயக்கங்கள் தோன்றுமோ
ஒரே பேருந்து பயணம்,
அதே நிறுத்தம்,
யார், யாரை கடந்து செல்வதென குழம்புகிறோம்...
யாரோவாகி கடந்தும் செல்கிறோம்...
மீண்டும் ஏன் இந்த சாபம்?
விலகியே நிற்கிறேன்...
நீயும் எதிரில் நிற்காதே...
மீண்டும் மயக்கங்கள் தோன்றுமோ?
மூன்றாம் அத்தியாயம் என் கற்பனை என்றே இருந்தேன்...
விடை தெரிந்த விடுகதைகள் முடியாமல் நீள்கிறதே...
நீ அறியாத மொழியில் கவிதை எழுதிடவே, மகிழ்கிறேன் இப்பொழுதெல்லாம்...
அது எப்படி?
மிக சரியான பாடலை பாடுகிறது எனது கைபேசி...
சொல்லிவிட்டு தான் வந்தாயோ?
ரீங்காரம் கேட்பதற்குள் நிறுத்தி விட்டேன் இதய துடிப்பை...
மீண்டும் துண்டுப்பட அனுமதியேன்...
கடந்து செல்வதிலும் சுகம்...
குழம்புகிறேன், திணருக்கிறேன், மயங்குகிறேன்...
மீண்டும் கவிதை எழுத வேண்டும் என்று நினைத்தேன்...
எப்படி நீ அதை அறிந்தாய்?
யார் போகிற பாதையில் இப்பொழுது யார் போகிறோம்?
அது என் பாதை....
நீ முன் செல்லாதே...
கடைசி பேருந்தே தான் என நிச்சயத்தது யாரோ?
எனது தாமதத்தை கோபித்து கொள்கிறேன்...
நல்ல வேளை, விழிகளால் விழி மோதாமல் தப்பித்தேன்...
கருவிழியில் விழாமல் தப்பிக்கிறேன்...
எனது பாதையில் யாருமில்லை...
உனது பாதையில் இருக்கலாம்... இருக்கட்டும்...
சில நொடிகளில் ஒன்றாய் துடித்த துடிப்புகள் போதும்,
எனது மீதி ஆயுளையும் கடந்துவிடுவேன்...
அடைமழை பொழிய தெரியாமல்,
தூரல்களால் என்னை வதைக்காதே...
தூரல்களே அறியாத நிலவாகிறேன்...
கரைந்து கரைந்து காணாமல் போன காதலை, மீட்டெடுக்க வந்தாயோ?
மீண்டும் அதை புதைக்க வந்தாயோ?
கனவுகள் விழுங்கி, விக்கி கிடக்கிறேன்...
கழுத்தை நெறிகாதே...
தவறுகள் செய்வது நான்...
கோபம் கொள்கிறேன் உன் மீது...
இந்த கிருக்கனை மன்னித்துவிடு...
எனது மாலை நேரங்கள், மயக்கமாகவே இருக்கட்டும்...