ஜென்ம சரித்திரம்

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரம்.மாணவர்கள் அனைவரும் தங்கள் முடிவுகளை தெரிந்துகொள்ள பள்ளிகளிலும் ப்ரவுசிங் சென்டர்களிலும் அலை மோதிக் கொண்டிருந்தனர்.அன்று தான் ராகினிக்கும் தேர்வு முடிவு.மொத்த மாநிலமும் பரபரப்பாக இருக்கும் நிலையில்,முடிவுகள் வெளியாகி அரைமணிநேரம் கழித்து தான் தூக்கம் கலைந்து கண் விழிக்கின்றாள்.தேர்வு முடிவுகள் வெளியாகி விட்ட நிலையிலும் அவளிடம் எந்த ஒரு பரபரப்பும் இல்லை.அவள் எழுந்து வந்தவுடன் தொலைக்காட்சியினை சற்று உற்று நோக்கிவிட்டு தன் வேலைகளை செய்ய தொடங்கினாள். அவள் அலட்சியமாக இருப்பதற்கு காரணம் தேர்வில் எப்படியும் ஆயிரத்தி நூறுக்கு மேல் எடுத்து விடுவோம் என்ற நம்பிக்கை அவளிடம் இருந்தது.😳

கால் மணிநேரம் கழித்து ராகினியின் தமையனிடமிருந்து அழைப்பு வந்தது. ராகினி ஆயிரம் மதிப்பெண்கள்நஎடுத்துள்ளதாக கூறினான்.அதைக் கேட்ட ராகினி மனம் உடைந்து போனாள்.ஆயிரம் மதிப்பெண்களை வைத்துக்கொண்டு மருத்துவம் படிக்க முடியாது என்ற எண்ணத்தில் மனம் நொந்து போனாள்.

அந்த சமயத்தில் ராகினியின் அம்மா வரலட்சுமி, " ஏன்டி நல்லா பரீட்சை எழுதுனேனு சொன்ன இப்ப என்னன்னா ஆயிரம் மார்க் தான் எடுத்துருக்க" என்று கோபத்துடன் கேட்டாள். "இல்லம்மா நல்லாதான் எழுதுனேன்..............எப்படி கொறஞ்சிச்சுன்னே தெரிலம்மா " என்றாள் ராகினி.

இவ்வாறு மதிப்பெண் குறைவினைப் பற்றி ஒரு பிரளயமே நடந்து கொண்டிருந்தது.

அதே நேரத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் குறுக்கு தெருவில் முதல் வரிசையிலிருந்து நான்காவது வீட்டு மொட்டை மாடியில் ஒரு பத்து பேர் கொண்ட கும்பல் குதூகலமாக தெருவே அலறும் படி கொண்டாட்டம் நடத்திக் கொண்டிருந்தது.அந்த கொண்டாட்டத்திற்கு காரணம்......................கும்பலில் இருந்த பத்து நபர்களும் பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்தது தான்.அனால் அங்குள்ள ஒருவனை மட்டும் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடினர்.ஏனெனில் அவன் அந்த கும்பலில் 1200க்கு 480 மதிப்பெண்கள் பெற்று முன்னிலை வகித்தான்.

அவன் வேறு யாருமில்லை நம் கதையின் நாயகன் விக்ரம்.

அந்த சமயத்தில் விக்ரமின் நண்பன் ராஜா, " ஏன்டா மச்சான் எக்ஸாம் சமயத்துல எங்க கூட தானடா சேர்ந்து அரட்டை அடிச்ச...................நீ மட்டும் எப்படிடா இவ்வளோ மார்க் எடுத்த " என்றான்.
"போடா நீ ஒருத்தன் எனக்கே தெரியல எப்படி இவ்வளோ மார்க் வந்துச்சுனு.........." என்று பெருமூச்சு விட்டபடி விக்ரம் கூறினான்.உடனே விக்ரமின் இன்னொரு நண்பன் விஜய், "இதுல என்னடா பெரிய ஆச்சரியம் எப்போதும் நீதானடா நம்ம கேங்க்ல அதிக மார்க் எடுப்ப......................என்ன இந்த தடவை கொஞ்சம் கூடிடுச்சு அவ்வளோ தான் " என்று கூறி நகைத்தான்.

மாடியின் விளிம்பின் ஓரம் நின்று தெருவில் போய் வரும் பெண்களை எல்லாம் பார்த்துகொண்டிருந்த ராஜா உடனே விக்ரமின் அருகில் வந்து, "எது எப்படியோ மச்சி இன்நிக்கு நைட் ட்ரீட் கனஃபார்ம்" என்றான்.ராஜாவின் மொழிகளுக்கு ஒத்துக் கொள்வது போல் தலையை அசைத்தான் விக்ரம்.

இரவு நடக்க இருக்கும் கொண்டாட்டத்திற்கு முன்பு விக்ரமை பற்றி அறிமுகம் கொடுப்போம்.

அரச காலம் முதல் புகழ் பெற்ற நகரமாக விளங்கும் தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டையில் பெரிய ஜமீன் பரம்பரையைச் சார்ந்தவன் விக்ரம்.கூட்டுக்குடும்பமாக அரண்மனையில் வாழ்ந்தவர்கள் விக்ரமின் தந்தை இறப்பிற்கு பிறகு அவன் தாயார் மந்தாகினி அவனை அழைத்துக்கொண்டு பட்டுக்கோட்டையிலேயே தங்களுக்குச் சொந்தமான வேறொரு மாளிகைக்கு குடியேறினர்.

வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால் விக்ரம் மிகவும் செல்லமாக வளர்ந்தான்.இயல்பாக பழகும் குணத்தினால் அனைவருக்கும் பிடித்தமான பையனாக ஊரில் வலம் வந்தான்.தன் இயல்பான குணத்தினால் அவனுக்கு நண்பர்கள் பலர் இருந்தனர்.நண்பர்கள் பட்டாளம் பல இருந்தும் அவனுக்கு பாலிய நண்பனாகவும் நெருங்கிய நண்பனாகவும் இருப்பவன் ராஜா மட்டுமே. ராஜா, விக்ரமின் அனைத்துக் காரியங்களிலும் பங்கெடுத்து ஏந்நேரமும் அவன் கூடவே இருப்பவன்.விக்ரமைப் பற்றி அனைத்தும் அறிந்தவன்.ராஜா அறியாத ஒன்று என்னவாயின் அது விக்ரமின் காதல்.

ஆம் விக்ரம் தன் கனவிலும் நினைவிலும் மாறி மாறி நினைத்துக் கொண்டிருப்பது அவள் ஒருத்தியை மட்டும் தான்.
சௌந்தர்யம் பொருந்திய முகம்...................வெள்ளி நிலவின் முகம்,நட்சத்திரங்களை அள்ளித் தூவிய கண்கள்.................முத்து பற்கள்.அந்த முகம், அவன் கண்களை மூடினாலே இமைகளில் ஒட்டிக் கொள்ளும்.அந்த பௌர்ணமி முகத்தினை எண்ணி எண்ணி ரசித்தான்.அந்த உருவத்தை ஒருமுறை நேரில் கண்டிட துடித்தான்.

ஆம் இதுவரை விக்ரம் அந்த உருவத்தை நேரில் கண்டதில்லை.அவ்வாறாயின் எப்படி காதல் என்று கேள்வி எழும். அவன் மனதில் குடிக்கொண்ட அந்த பிம்பம்......................அவன் சிறுவனாக இருந்தபோது அரண்மனை இருட்டறைக்குள் செல்லக் கூடாது என்பது அவன் தாயார் மந்தாகினியின் கட்டளை.ஆனால் ஒருநாள் அவன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது அந்த அறைக்குள் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த அறையினுள் கிடந்த படத்தில் ஒரு பெண்ணின் உருவத்தை கண்டான்.அந்த உருவம் அவன் கண்களை ஈர்த்தது.பிறகு வாலிப பருவத்தை எட்டிய போது தன் வருங்கால மனைவி அந்த பெண்ணைப் போல இருக்க வேண்டுமென்று எண்ணினான்.

பிறகு நாட்கள் செல்ல அந்த பெண்ணின் உருவத்திலேயே தன் மனைவி இருக்க வேண்டுமென்ற எண்ணமும் அவனிடம‍் தோன்றியது.சில சமயங்களில் இது முட்டாள்தனம் என்றும் நடக்காத ஒன்றுக்கு ஆசைப்படுவதாகவும் எண்ணினான்.இப்படி அந்த பெண்ணின் ஞாபகத்திலேயே கரைந்தான்.தன் எண்ணங்களையும் ஆசைகளையும் தன் மனதிலேயே பூட்டி நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு இன்று தன் நண்பன் விஜயின் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு சுற்றுப்பயணத்துக்கு வந்தவன் இன்று இரவு நடக்க இருக்கும் இரவு கொண்டாட்டத்திற்கு தயாராகி கொண்டிருந்தான்.

இரவு கொண்டாட்டத்தில் நண்பர்கள் அனைவரும் அரட்டை அடித்துக் கொண்டும் உணவருந்திக் கொண்டும் இருந்தனர்.அந்த சமயத்தில் விஜய், " சரிடா ரிசல்ட் வந்துடுச்சு இனி எந்த காலேஜ்ல படிக்கிறதுனு முடிவு பன்னிருக்கீங்க " என்றான்.அங்கு இருந்தவர்கள் அனைவரும் வெளியூர் சென்று படிக்க போவதாக கூறினர்.அந்த சபையில் விக்ரம் மட்டும் அமைதியாக ஏதோ யோசித்துக் கொண்டிருப்பது போல் இருந்தான்.

உடனே விஜய் விக்ரமை நோக்கி, "என்னடா நீ மட்டும் எதுமே சொல்லல்ல...............எங்க படிக்க போற " என்றான்.சற்று திடுக்கிட்டவனாக விக்ரம், " ம்ம்ம்............நானாடா............... அம்மாவ பிரிஞ்சி என்னால இருக்க முடியாது அதனால பட்டுக்கோட்டையிலேயே என்ஜீனீயரிங்க் படிக்கலாம்னு முடிவு பன்னிருக்கேன்டா " என்றான்.

" என்ன என்ஜீனீயரிங்கா.............நீ படிப்படா உன்ன உங்க வீட்டுல சேத்து விடுவாங்க..................அப்போ இன்னும் கொஞ்ச நாளுல நம்மலாம் பிரிஞ்சிடுவோமா........." என்றான் கும்பலில் ஒருவன்.
"ஏன்டா கவல படுற லீவ்ல எல்லாரும் மீட் பண்ணுவோம்டா " என்றான் ராஜா.உடனே விஜய், " அப்போ ராஜா நீ எங்க " என்றான்.
"அவன் எங்க போக போறான்...........நான் எங்கையோ அங்க தான் ராஜாவும் " என்றான் விக்ரம்.விக்ரமின் மொழிகளுக்கு ஒத்துக்கொண்டான் ராஜா.

பிறகு சில நாட்கள் கழித்து நண்பர்கள் அனைவரும் கல்லூரியில் சேர்ந்தனர்.விக்ரம் வசதியான வீட்டு பிள்ளை என்பதால் அவனும் ராஜாவும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தனர்.

ராகினியும் மருத்துவம் படிக்க முடியாததால் தன் ஊருக்கு அருகே உள்ள பட்டுக்கோட்டை பொறியியல் கல்லூரியில் இணைந்தாள்.


தொடரும்

எழுதியவர் : புகழ்விழி (12-Jun-16, 1:56 am)
Tanglish : jenma sariththiram
பார்வை : 244

மேலே