வேரும் தண்டும் போல

முன்மொழிந்த வாக்குறுதிகளை, ஏனோ...
மறந்துவிட்டாள் - என்
கண்பொழிந்த நீர்த்துளிகளை, அவள்தான்
திறந்துவிட்டாள்...

மடித்து வைத்த என் மூளையிலே..,
தடித்து கிடைக்கும் சில நினைவுகள்.,
வெடித்துக் கொண்டிருக்கிறதே தினம்...

பிடித்துவைக்க முடியாத இந்த வாழ்நாட்களை...
பிடித்தவருடன் செலவிட சொல்கிறதே உள்ளே
துடித்துக் கொண்டிருக்கும் மனம்...

வெகுதூரம் சென்றுவிட்டோம்... விதையை கிழித்து,
வெவ்வேறு திசையில் செல்லும்.., தண்டும்
வேரும் போல பயணித்துவிட்டோம்...

காய்ந்த இலைகளாய் உதிரும் என்
கண்ணீர்த் துளிகள் - இனிக்கும்
கனிகளாய் என் மனக்கிளையில் உன்
காதல் நினைவுகள்...

உதடுகள் மறைத்தவற்றை,என் எழுதுகோல்
உதறித்தள்ளியதே... இக்காகிதத்தில்...

எழுதியவர் : சாய நதி (4-Jul-16, 1:08 pm)
பார்வை : 81

மேலே