இதயத்தில் புதுவிளக்கேற்றுங்கள்

மாணவர்களே! இதயத்தில் புதுவிளக்கேற்றுங்கள்

மாண்புமிக்க மாணாக்கரே,

நாளையொரு புதிய விடியலுக்கு வித்திடப்போகிற நம்பிக்கை நட்சத்திரங்களே, உங்கள் இதயத்தோடு ஒரு சில வார்த்தைகள். ஒரு தாயின் அன்போடும் தந்தையின் எதிர்பார்ப்போடும் உங்கள் பள்ளி வாழ்க்கை ஏடுகளைப் புரட்டுகின்றேன்.
பள்ளிப் பாடங்களே பெருஞ்சுமையாகிவிட்ட இன்றைய சூழலில் பெற்றோரின் கனவுகளையும் சுமந்து கொண்டு நடைபோடும் உங்களைப் பார்க்கும்போது எனக்கும் வருத்தம் மேலிடுகிறது.
இந்த மனச்சுமையைச் சுகமாக மாற்றும் வல்லமையை நீங்கள் வளர்த்துக் கொள்வது தவிர மீள்வதற்கு வேறுவழியில்லை.
அன்பு பெற்றோர் எப்படியெல்லாம் அரும்பாடுபட்டு உங்களைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்று கொஞ்சம் ஆழ்மனத்தில் நிறுத்தி நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?.
உங்களின் ஒளிமயமான எதிர்காலமே முக்கியமென தங்கள் உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாது அல்லும் பகலும் உழைக்கிறார்களே அந்தத் தியாக உள்ளங்களின் நம்பிக்கைகளை சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?
வெயில் மழை பாராமல் அத்தனை துன்பங்களையும் தனதாக ஏற்றுக்கொண்டு உங்களின் நலனே தன் சுகமென்று நம்பிக்கையில் கழிக்கும் அவர்களின் உள்மன ஆவலையாவது அறிந்துள்ளீர்களா?
படிக்கின்ற வயதினிலே கற்பனை தேரோடத்தில் சினிமா நாயகன் நாயகிப்போல் உங்களையே நீங்கள் வரித்துக்கொண்டு காதல் வலையில் வீழ்ந்து காமலீலையில் அழுகிப் போவதைப் பார்க்கும்போது இதயம் வலிக்கிறது.
தொன்றுத்தொட்டு நம் முன்னோர் சேர்த்து வைத்த பண்பாட்டுச் செழுமைகளைச் சிந்தையிலே நிறுத்தாமல் பள்ளிச் சந்தையிலே சீரழிக்கும் உங்களைப் போன்ற மாணவர்களின் எண்ணிக்கை சிறிதில்லை.
காடுமேடு கழனி திருத்தி நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி பெற்றக் குழந்தைகள் புவியோங்கப் பாடுபடும் பெற்ற மனங்களின் மனக்கோட்டைகளைச் சிதறடிக்கும் மாணவர் கூட்டத்திற்கு இப்போதும் குறைவில்லை.
கல்வியென்றாலே கசக்கும் கற்றவர் சொல் என்றாலே முகத்தைத் திருப்பும் முன்னோர் நெறிமறந்து உருமாறி இலக்கின்றி காற்றடித்தால் அலைக்கழிக்கும் இலவம் பஞ்சாய்ப்போன உங்களைப் போன்ற மாணவர் இந்நாளில் ஆன நெடுங்கதைகள் பலவுண்டு.
புனித புத்தகங்களைச் சுமக்கும் பையிலே சினிமா செறிவட்டுகளை சுமந்து சென்று சகாக்களோடு சினிமா ஆய்வரங்கம் செய்யும் மாணக்கரை நிறையவே சந்திக்கின்றேன்.
கணிதம் அறிவியல் என்றாலே புறமுதுகு காட்டி ஓடியதன் விளைவாக இன்று அறிவியல் பிரிவில் பயிலும் இந்திய மாணவர் எண்ணிக்கை அருகிவருவது கண்கூடு.
சீன, மலாய் மாணவர்களைவிட நாம் அறிவில் குறைந்தவர்களென்று தம்மையே தாழ்த்திக்கொண்டு படிப்பில் போட்டியின்றி மெளன நாடகம் நடத்துகின்ற மாணவர் நிறையவே உள்ளனர்.
இந்திய மாணவர்கள் என்றாலே பிரச்சனைகளின் பிரதிநிதிகளென்று இடைநிலைப்பள்ளியில் பெரும்பாலான ஆசிரியர்கள் முகஞ்சுளிக்கிறார்கள். மிகுதியான கட்டொழுங்குப் பிரச்சனைகளும் குறைவான தேர்ச்சி விகிதமும் அந்த முகச்சுளிப்பிற்கு மூலமாகிறது.
நம் மாணவர்கள் ஏவல் செய்யும் கூலிகளாகவே தகுதியானவர்கள்; கல்வியில் அக்கறையற்றவர்கள்; நல்லொழுக்கத்திலிருந்து நழுவிவிட்டவர்களென தப்பெண்ணம் பரவலாக உலாவருகிறது.
நாடு தழுவிய நிலையில் பல்லின ஆசிரியர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தபோது வெளிப்பட்ட குற்றச்சாட்டுகள்தான் மேலே நான் குறிப்பிட்டவை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
ஒரு சிலர் விதிவிலக்காகலாம் ஆனால் பெரும்பாலான நம்மின மாணவர் இன்னும் இருட்டில் உலவுகிறார்கள் என்றெண்ணத் தோன்றுகிறது. அன்பு மாணவர்களே, போனது போகட்டும் இனியாவது இதயத்தில் புதுவிளக்கேற்றுங்கள்.
காலக் கணக்கிலே கணநேரமும் ஓயாமல் கல்வியெனும் கற்கண்டை கருத்தாய் பயின்றிடுங்கள். கல்வி விளக்கு உங்கள் உள்ளங்களில் எரிகின்ற வரைக்கும் நம் சமுதாயம் சிறக்கும்.
வறுமைப் புயலிடையே ஒவ்வொரு கணமும் வேதனையால் வெந்திடும் உங்கள் பெற்றோர் அகம் மகிழவுக் காண இன்றே இலக்கைத் தீர்மானித்துவிடு; சீர்கெட்ட செயல்களின் வேரையழித்து கல்வி வேள்வியில் இதயத்தை நிறுத்திடு.
நன்செய் நிலத்தினில் களையிருந்தால் நீக்குவன் உழவன்; அதுபோல உங்கள் நலத்திலே நாசமென்றால் நீக்குவது என் கடமையன்றோ?.
கண்ணிருந்தும் குருடராய்க் காதிருந்தும் செவிடராய்க் கும்மிருட்டில் திரிகின்ற நம் மாணவ இனத்தைக் கைகொடுத்து நல்வழிக்காட்டும் பெரும்பொறுப்பு சமுதாய முழுமைக்குமுண்டு.
Posted by தமிழ்மாறன்

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (5-Jul-16, 9:55 pm)
பார்வை : 195

மேலே