ஆசை ஆசையாய்

ஆசை ஆசையாய்
=================

உன்னிடம் எப்போதும்
எனக்கு பற்றாக்குறைதான் மித்ரா

சாதாரணமாக
ஹோட்டல் சென்றுவிட்டு
ஒரு கொத்து பரோட்டாவிற்கு மேல்
ஒரு சாதா பரோட்டா சாப்பிடுவதைப்போல
பார்பர் ஷாப் சென்றுவிட்டு
அரை மணி நேர வலி உருவுதலுக்குமேல்
ஒரு ஐந்து நிமிடம் ப்ளீஸ் என
உபரி தானம் கேட்டு
பாவப்பார்வையை வீசுவதைப்போல
உன்னோடு நிறைய பேசிவிட்டு
நீ போகும் அந்த
கடைசி நொடியிலும் கூட
உன்னை பிடித்து நிறுத்தி
வேலை இருக்கிறதுடா என
நீ சொல்லும் எந்த காரணங்களையும் தாண்டி
மேலும் ஐந்து நிமிடங்கள்
உபரி வாய்ப்புக் கேட்கிறேன்
கொஞ்சம் பேசிவிட்டுதான் போயேன் என்று

நம் தொடக்கமும் முடிவும்
சண்டையாகத்தான்
இருக்கும் என அறிவேன்
நீ நம் காதலை
அவர்களை இவர்களை உதாரணம் சொல்லி
பிச்சி பிச்சி திங்கலாம்
எங்கே போய்விடப் போகிறேன் என்பாய்
நான் நம் காதலை
உருண்டையாக திரட்டி (conglomerates)
ஒரே விழுங்கலில்
உள்ளிழுத்திடுவேன்
மற்றொரு முறை புதுப்பிப்பேன்

போனமுறை
உன் கருநீள முடிகளுக்குள்
சில வெள்ளை முடிகள் பூத்து மறைந்திருப்பதை
பார்த்தபோதுதான்
உன்னை அதிகம் நேசித்திருந்தேன்
இம்முறை
உன் எல்லா முடிகளும்
நரைச்சுடுச்சுடா என்று
நீ சொல்லும்முன்பே நான் அறிகிறேன்
ஆனாலென்ன
போன முறையைவிட
இம்முறை உன்னை அதிகம் நேசிக்கிறேன்

என்னை அதிகம் நேசிக்காதே
நீ நேசிப்பதற்காக
என்னால் அந்தரத்தில்
தவம் புரிய முடியாது என்கிறாய்
அதையேத்தான்
நானும் சொல்கிறேன்
என்னை அதிகம் நேசிக்காதே
தப்பித் தவறி
நான் இறந்துவிட்டால்
மேலும் கீழுமாக
கால்கள் பதியாத ஆவியாய்
ஆகாய கமனத்தினூடே
உன்னைப் பின் தொடரலாம் தெரியுமா ??

உன்மேல்
ஆசைக்கொண்ட
மனித பிறவி ஆகிவிட்டதால்தான்
அவ்வப்போது
அருகித் தொட்டும்
என்னை முத்தமிட்டும்
பின்பு விலகியும் போகிறாய்ப்போல்
எனக்கும் ஆசைதான்
உன் விரல்கள் தொடுக்கும்
பூக்களைப்போல
உன் தோள்களில் வண்ணம் படரும்
வண்ணத்துப் பூச்சியைப்போல
ஒரு பிறவி வேண்டும் என

என்ன செய்ய நான்
உன்மேல் அற்ப ஆசைக்கொண்ட
மனிதப்பிறவி ஆகிவிட்டேன்
ஆதலால் மன்னித்துவிடு ம்ம்ம்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (21-Jul-16, 5:22 pm)
பார்வை : 307

மேலே