கடமையெனக் காத்திடுவீர்
உழைத்துத் தேய்ந்திட்ட
உயிரொன்று உறக்கத்தில் !
பிழைத்து வாழ்ந்திடவே
கூறுகளருகில் கூடாக !
மறைந்தாரோ மணந்தவர்
மறந்தனரோ பிள்ளைகள் !
விட்டனரோ வீதியில்
விளைந்தவர் கருவினில் !
வாங்குவோர் வரவில்லை
வாழ்ந்திடவும் வழியில்லை !
இத்தாயின் நிலைகண்டு
இதயமும் வலிக்கிறது !
கண்டிடும் காட்சியால்
கரைந்திடும் கல்மனமும் !
கண்ணீரும் செந்நீராகும்
கரைகடந்த கடலாகும் !
வளரும் தலைமுறையே
வளர்ந்திட்ட சமுதாயமே
ஒதுக்காதீர் பெற்றவரை
மறவாதீர் கருவறையை !
சுமையெனக் கருதாமல்
சுமந்தாள் அன்னையும் !
இமையென இயன்றவரை
காத்திட்டாள் உன்னையும் !
நன்றிக்கடன் செலுத்திட
நானிலத்தில் வாழ்ந்திட
இதயம் நிற்கும்வரை
இன்பமாய் வைத்திரு !
தாயின்றி எவருமில்லை
தரணியில் பிறக்கவில்லை !
தன்னுயிராக தாயினை
கடமையெனக் காத்திடுவீர் !
பழனி குமார்